Monday, December 2, 2019

என்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் சில


1. இந்திய நாட்டில் சிறுபான்மையினர், தலித்துகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்.

2. மதவெறி, ஜாதி மற்றும் இன, மொழி வெறி வெறுப்பு அரசியல் வேரறுக்கப்பட்டு இந்தியாவின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படவேண்டும்.

3. ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு காந்திய வழியில் இந்திய ஜனநாயகம் மேம்படுத்தப்படவேண்டும். 

4. பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு உள்நாட்டு உற்பத்தித்திறன் உயர்த்தப்படவேண்டும்.

5. ஏழைகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு சமூகநீதி  பாதுகாக்கப்படவேண்டும். 

Thursday, October 10, 2019

தினமும் சொல்ல வேண்டிய இறை வழிபாட்டுப் பாடல்கள்

தினமும் நாம் சொல்ல வேண்டிய மற்றும் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டிய முக்கியமான இறை மந்திரங்கள் மற்றும் எனக்குப் பிடித்த வழிபாட்டுப் பாடல்களை ஒன்றாகத் தொகுத்துள்ளேன்.  இதைப் படித்து, மனனம் செய்து, பாடி இறை அருள் பெறுக

அம்மன் பாடல்கள் 

அபிராமி அந்தாதி

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும்
கர்ண குண்டலமும் மதிமுகமண்டலம் நுதற்
கஸ்தூரிப் பொட்டும் இட்டுக்
கூரணிந் திடு விழியும் அமுதமொழியும் சிறிய
கொவ்வையின் கனி அதரமும்
குமிழனைய நாசியும் குந்த நிகர் தந்தமும்
கோடு சோடான களமும்
வாரணிந் திருமாந்த வனமுலையும் மேகலையும்
மணிநூ புரப்பாதமும்
வந்தெனது முன்னின்று மந்தகா சமுமாக
வல்வினையை மாற்றுவாயே !
ஆரமணி வானில் உரை தாரகைகள் போல நிறை
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி ! அபிராமியே

தனம்தரும், கல்விதரும், ஒருநாளும் தளர்வறியா மனம்தரும், தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம்தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே.

பூத்தவளே புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே! மாத்தவளே உன்னைஅன்றி மற்றோர்தெய்வம் வந்திப்பதே

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே. பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே

நாயகி நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாய்கி, மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று ஆயகியாதிய உடையாள் சரணம் அரண் நமக்கே


பயிரவி, பஞ்சமி, பாசாங் குசைபஞ்ச பாணி, வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர்சண்டி, காளி, ஒளிரும்கலா வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, அங்குச பாசங்குசமும் கருப்பும் அங்கையிற் சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம் பேபழுத்த
படியே மறையின் பரிமள மேபனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப்பிற வாமல் வந்து ஆண்டுகொள்ளே

உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே


சிவபெருமான் பாடல்கள்

திருவாசகம்

சிவபுராணம்

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,
பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
`உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்
"ஐயா" என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றது
ஈச னெந்தை யிணையடி நிழலே.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை  நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசந்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை யல்லாள் இனியாரை நினைக்கேனே

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப்பெறுந் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரே மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும்
கண்கள்நின்றிமைப் பதுமறந்தாலும்
நற்த வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே

ஓம்நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நமஓம்
பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்


விநாயகர் பாடல்கள்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக்கால்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா.

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம். 


முருகன் பாடல்கள்

அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும் நெஞ்சில்
ஒருக்கால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்

ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியாரெல்லாம்

சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழனிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்

வருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 

சண்முகக் கடவுள் போற்றி ! சரவணத்(து) உதித்தோய் போற்றி!
கண்மணி முருகா போற்றி ! கார்த்திகை பாலா போற்றி!
தண்மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி !
விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி ! போற்றி !!


திருமால் பாடல்கள்

பச்சைமாமலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம்
கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே.


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் ஜோதி வலத்துறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே!

திருப்பாவை 

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
     பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்


ஆஞ்சநேயர் பாடல்கள்

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான.

ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹ சாரிணம்
துஷ்ட க்ரஹ வினாஸாய
ஹனுமந்த முபாஸ் மஹே


திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே


குரு பகவானுக்கு உகந்த மந்திரங்கள்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

காயத்திரி மந்திரம்

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|


மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஷ்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

Wednesday, April 3, 2019

‘வயிறு’ பற்றி ஒளவையும் ரமணரும் கூறியது

ஒருநாள் இரவு ஆசிரமத்தில் சுவையான சாப்பாடு சாப்பிட்டு விட்டு பக்தர்கள் சிலருடன் ரமண மகரிஷி அமர்ந்திருந்தார். வழக்கத்தை விட தாமதமாக இரவு உணவை உண்டதால் எல்லோரும் களைப்படைந்தனர்.
அப்போது அவர்களுடன் இருந்த சோமசுந்தர சுவாமி என்பவர் நீண்ட அறையில் படுத்துக் கொண்டு தன் வயிற்றைத் தடவியபடி பாடல் ஒன்றைப் பாடினார்.
''ஒருநாள் உணவை
ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளைக்கு
ஏலென்றால் ஏலாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது''
இந்தப் பாடல், ஒரு காலத்தில் வயிற்றை நோக்கி ஒளவையார் என்னும் பெண் புலவரால் பாடப்பட்டதாகும்.
இதன் பொருள்:
''ஏ, வயிறே! ஒரு நாள் உணவை உண்ணாமல் இரு என்றால் நீ கேட்பதில்லை. அல்லது இரண்டு நாளைக்குச் சேர்த்துச் சாப்பிடு என்றாலும் அவ்வாறு செய்வதில்லை. நீ மிகவும் துன்பம் தருகிறாய். உன்னோடு வாழ்வது என்பது அரிது.''
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமண மகரிஷி, வயிறு மனிதனை நோக்கிப் பாடுவதுபோல, அதே பாடலை மாற்றிப் பாடினார்.
''ஒரு நாழிகை வயிறு எற்கு
ஓய்வு ஈயாய் நாளும்
ஒரு நாழிகை
உண்பது ஓயாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் உயிரே
உன்னோடு வாழ்தல் அரிது''
பாடலின் பொருள் இதுதான்:
''ஓ, உயிருக்கு உறைவிடமான மனிதனே! வயிறாகிய எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை. ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. என் துன்பம் உனக்குப் புரிவ தில்லை. எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே! உன்னோடு வாழ்தல் அரிது.''
இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை பற்றிக் கூறும்போது, ''விளையாட்டுக்காக எழுதிப் பாடினேன்'' என்றார் மகரிஷி. சிந்தித்துப் பார்த்தால் இது விளையாட்டாகப் பாடிய பாடலாகவா தோன்றுகிறது?
ரமணரது இந்த பாடல், வயிற்றை நோக்கிப் பாடிய ஒளவையாருக்கு, வயிறே பதில் சொல்வது போல் அல்லவா தெரிகிறது!

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

திருப்புகழ் 6 முத்தைத்தரு  (திருவருணை)

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,

சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்
பரமசிவனார்க்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான
ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி
தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?

(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை
விரிவாக வருணிக்கிறது).

தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து
காளிதேவி

திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
செய்யவும்,

கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத
 ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
என்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ
 ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
போர் செய்யவல்ல பெருமாளே.

Tuesday, April 2, 2019

சந்தம் தமிழுக்குச் சொந்தம்


திரிகூடராசப்பக்கவிராயர் எழுதிய திருக்குற்றாலக்குறவஞ்சி நூலிலே வசந்தவல்லி என்ற பெண் பந்துவிளையாடும் காட்சியை விளக்குவதாக அமைந்துள்ள பாடல்கள் நம்மை மிகவும் பரவசப்படுத்துகின்றன. பண்டைக்காலத்திலே பந்தடித்து விளையாடுவதும் பெண்களின் விளையாட்டுக்களிலே ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதற்கு இந்தப்பாடல்கள் சான்றாக உள்ளன. பந்தை எறிவதும், அதைப்பிடிப்பதும், பந்து பறப்பதும், நிலத்தில் விழுவதுமான காட்சிகளைப் படம்பிடித்துக்காட்டுவதுபோல இந்தப்பாடல்களைப் பொருத்தமான சந்தத்தில் புலவர் எழுதியுள்ளார்.

செங்கையில் வண்டு கலின்கலின் என்று ஜெயம் ஜெயம் என்றாட - இடை 
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட - மணிப் 
பைங்கொடி மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றனளே.

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாட - குழல்
மங்கு வில்வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை திண்டாட
மங்கல மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றனளே.

சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப் - புனை
பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு பாவனை கொண்டாடநய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலேஅணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்துபந் தாடினளே."

இந்தப் பாடல் வரிசையிலே, அடுத்ததாகத் தொடர்ந்து வருவது திரைப்படம் ஒன்றிலே இடம்பெற்றதால் மிகவும் பிரபல்யமாகிவிட்ட பாடலாகும். 'காதலன்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலை எழுதியவர் இக்காலத் திரைப்படப் பாடலாசிரியர்களில் ஒருவர்தான் என்று இன்னும் பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், திரிகூடராசப்பக் கவிராயர் என்ற புலவரால் இயற்றப்பட்ட குற்றாலக் குறவஞ்சியிலே இடம்பெற்ற அந்தப்பாடலைத் திரைப்படத்திற்காக எடுத்தாண்டு இசையமைத்துப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதுதான் உண்மை.

அந்தப்பாடல்

"இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மனம்
முந்திய தோவிழி முந்திய தோகரம் முந்திய தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப் 
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரிபொற் பந்து கொண்டாடினளே."

Wednesday, February 20, 2019

ஏன் பாசிச கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க க் கூடாது ?


1. கெயில், மீத்தேன், ஹைடிரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், சேலம் 8 வழிச்சாலை என மக்கள்நல விரோத திட்டங்கள் .
2. பண மதிப்பிழப்பு தோல்வி, ஜி.எஸ்.டி குளறுபடி, நடுத்தர, சிறு குறு தொழில்கள் நசுக்கப்பட்டு தொழில் முடக்கம்
3. அந்நிய முதலீட்டாளர்களுக்கும், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் சிவப்புக்கம்பள வரவேற்பு. 
3. ஒட்டு மொத்த அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஓட்டுக்கள் கிடைக்காது.
4. முஸ்லீம், கிறிஸ்தவர் மற்றும் தலித் வெறுப்பு அரசியல்.
5. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு.
6. சுவிஸ் வங்கியிலிருந்து இன்னும் கறுப்புப்பணம் மீட்கப்படாதது மற்றும் அவர்களது பெயர்கள் இன்னும் வெளியிடப்படாதது.
7. விஜய் மல்லையா, நீரவ் மோடி என வங்கிக்கடனை அடைக்காமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றது.
8. உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ போன்றவர்களின் தனிஅதிகாரத்தில் தலையிட்டு நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்படவிடாமல் தடுப்பது.
9. மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிட்டு கவர்னர்கள் மூலம் குழப்பம் விளைவிப்பது.
10. கட்சியினரின் திமிர் பிடித்த எதேச்சதிகாரமான பேச்சுக்கள்.
11. தேசப்பற்று என்ற பெயரில் மக்களிடையே பிரிவினயைத் தூண்டுவது, சாதி மத  வெறுப்புணர்வை வளர்ப்பது.
 12. தேசத்தந்தையைக் கொன்ற தேசவிரோத சக்திகளான கோட்ஸே, சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற இந்துத்துவவாதிகளை சிலை வைத்து வழிபடுவது.
13. உளவுத்துறை எச்சரித்தும் பாதுகாப்பில் கோட்டைவிட்டு 350 கிலோ வெடிபொருட்களுடன் தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது மோதி 45 ராணுவ வீரர்களை இறப்புக்கு காரணமாக இருந்தது.
14. தேசமக்கள் வறுமைவில் வாட விளம்பரத்திற்கு மட்டும் 3 ஆயிரம் கோடி செலவு.
15. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல் நடுத்தெருவில் அம்மணமாக போராட விட்டது.

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

Thursday, February 7, 2019

தமிழின் பெருமை

தமிழில் ஒரு பொருளுக்கு இத்தனை சொற்கள் இருக்கின்றதென்பதை இப்பாடல் விளக்கும் திறன் வியக்கச் செய்கிறது. எழுதியவர் கவி வீர ராகவ முதலியார்
“இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன்
பூசுமென்றாள்
மாதங்கமென்றேன்
யாம் வாழ்ந்தோமென்றாள்
பம்பு சீர் வேழமென்றேன்
தின்னுமென்றாள்
கம்பமா என்றேன்
நற்களியாமென்றாள்
கைமா என்றேன்
சும்மா கலங்கினாளே பாணீ”
அடுத்த நாட்டு அரசனைப் பாடிவிட்டு வந்த புலவரைப் பார்த்து, 'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனைவி கேட்கிறாள்.
புலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.
அது கேட்ட அவர் மனைவி, சந்தனம் என புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, சரி பூசிக்கொள்ளுங்கள் என்கிறாள்
புலவரோ, என்ன இவள்? தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.
அவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார்.
இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம்.
அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, சரி சாப்பிடுங்கள் என்கிறார்.
புலவர், இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.
மனைவி 'கம்பமா' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.
இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்
அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை என அறிந்த அவர் மனைவி, நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம்.
யானை என்பதை எத்தனை வகையாக தமிழில் சொல்லலாம் என்று பாருங்கள்.
புலவர்கள் எக்காலத்திலும் பொருளுள்ளவராய் வாழ்ந்ததில்லையாம். கிடைக்கும் பெரும் பரிசில்களை எல்லோருக்கும் ஈந்து விட்டு அடுத்த வேளை உணவுக்கு எதிரபார்ப்பவராய் இருப்பர் என்ற குறிப்பையும் முதலிரு வரிகளுக்கிடையே தருவது தெரிகிறதல்லவா?

Monday, January 28, 2019

பாரதி சின்னப் பயல்

 

எட்டயபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்பவர் தமிழ்ப் புலவர். பாரதியை விட வயதில் மூத்தவர். மன்னர் அவையில் பாரதியின் புலமையைச் சோதித்துக் கொண்டு அவரை ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னார்கள். காந்திமதிநாதன் "பாரதி சின்னப் பயல் ," எனும் ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார். அதில் பாரதியை ஏளனம் செய்யும் நோக்கமும் இருந்திருக்கிறது. பாரதி உடனே பாடினார்.

"ஆண்டில் இளையவன் என்ற‌ந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் ‍ மாண்பற்ற‌
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி (பார் அதி) சின்னப் பயல்"

"காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப் பயல்" எனும் பொருள்படும்படி அமைந்தது இந்தப் பாடல். இதைக் கேட்டு சபையோர் பரிகசிக்க குறுகிப்போனார் காந்திமதி நாதன். உடனே வயதில் மூத்தவரை அப்படி ஏளனம் செய்தது தவறு என்றுணர்ந்து பாரதி, மறுபடி பாடலை மாற்றிப் பாடினார். எப்படி?

"ஆண்டில் இளையவன் என்றுஐய அருமையினால்
ஈண்டின்று என்றன்தன்னை நீயேந்தினையால் மாண்புற்ற‌
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு
பாரதி சின்னப் பயல்"

வயதில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். சபையிலிருந்தோர் பாரதியின் பண்பினைப் போற்றினர். இந்த நிகழ்வு நடைபெறும் போது பாரதிக்கு வயது 14. இதுவே அவரின் இளமையில் புலமைக்கு ஓர் சான்று.

Sunday, January 13, 2019

தமிழ் மொழியின் இன்றைய நிலை

'மெல்லத் தமிழ் இனி சாகும்' என்ற வார்த்தை மெய்யாகி விடுமோ என்ற பயம் எனக்குள்ளே மெல்ல மெல்ல எழுகிறது, ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவியரில் 50 சதவிகிதத்தினருக்கு, இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தைப்  புரிந்துகொள்ளக்கூடிய திறன் இல்லை. எட்டாம் வகுப்பு மாணவ- மாணவியரில் 30 சதவிகிதத்தினருக்கும் இதே பிரச்னைதான். ஆங்கிலத்தை மின்னல் வேகத்தில் வாசிக்கும் இந்த மாணவ- மாணவியர்களால், தமிழைத் திக்கித் திணறித்தான் வாசிக்க முடிகிறது. இந்த விஷயத்தில் அரசுப் பள்ளி, தனியார்ப் பள்ளி என்கிற வேறுபாடு இல்லை. மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியரில் தனியார்ப் பள்ளிகளைவிட அரசுப் பள்ளி மாணவர்கள் சற்று பரவாயில்லை. அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி முறை  இருப்பதால், தனியார்ப் பள்ளி மாணவர்களைவிட அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் வாசிப்புத் திறன் சற்று அதிகம்.

தமிழ் மொழியை வாசிக்கவே மாணவ - மாணவியர் தடுமாறும் விஷயம் மிகவும் ஆபத்தானது. மொழியை வாசிக்கத் தெரிந்தால் மட்டுமே அதிலுள்ள கருத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். இப்போது தமிழில் படிக்கத் தடுமாறுபவர்கள், பிற்காலத்தில் கஷ்டப்பட நேரிடும். அதனால், இந்த விஷயத்தில் பள்ளிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலத்தை வாசிக்கும்போது உற்சாகப்படுத்துவது போன்று, தமிழை வாசிக்கும்போதும் குழந்தைகளை  உற்சாகப்படுத்த வேண்டும்.

இந்நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும் ?

குழந்தைகள் படிக்க விருப்பமுள்ள கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். சித்திரக்கதைப் (காமிக்ஸ்) புத்தகங்கள்கூட மாணவர்களின்  வாசிப்புத்திறனை மேம்படுத்தும். பாடப்புத்தகத்தை எடுக்க மறுக்கும் மாணவர்கள்,  சித்திரக்கதைப் புத்தகங்களை வாசிக்கும் திறன்மூலம் தங்களை அறியாமலேயே தாய்மொழியைப் பயில பயிற்சி பெறுகின்றனர். தமிழ் மொழியில் வெளிவந்த சித்திரக்கதைப் புத்தகங்கள் அழிந்துபோயின. இதுகூட மொழி அழிவுக்கான ஓர் அடையாளம்தான். இப்போது ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களையே குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். தமிழ் மொழி சித்திரக்கதைப் புத்தகங்களே மொழியைப் படிக்கவும் காக்கவும் துணை நிற்பவை; குழந்தைகள் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் சக்தி படைத்தவை.

தாய் மொழியில் வாசிக்கும் திறனைக் குழந்தைகளிடம் இளம் பருவத்திலேயே விதைத்துவிட வேண்டும். இதை நமது வீட்டிலிருந்தே தொடங்கினால்தான் நம் மொழியைக் காக்க முடியும். இப்போது தமிழ் படிக்கத் தடுமாறும் குழந்தைகள் 10 வருடங்களுக்கு முன் ஆங்கில மோகம் பிடித்த பெற்றோர்களால் உற்சாகப்படுத்தப்பட்டவர்கள். தமிழ் மொழியை அலட்சியப்படுத்தியதற்கு விலையாக, தாய்மொழியை வாசிக்கத் திணறும் மாணவச் சமுதாயம் உருவாகியிருக்கிறது. நம்மையறியாமலேயே தாய்மொழியின் அழிவுக்கும் நாம் துணை நிற்கிறோம். அதேவேளையில் இந்தியை எதிர்த்து வெளியே குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியே சென்றால், வருங்காலத்தில் தமிழ்மொழியே அழிந்துவிடும் நிலை உருவாகிவிடும். ஆகையால், தமிழ் மொழியை வாசிக்கத் தடுமாறும் குழந்தைகள் மீது இனி தனிக்கவனம் செலுத்தி, வாசிப்புத்திறனை மேம்படுத்தினால், நம் மொழி நம் கையில்.

வாழிய செந்தமிழ் ! வாழ்க  நற்றமிழர் !! வாழிய பாரத மணித்திரு நாடு !!!

- நன்றி விகடன்