Thursday, September 6, 2018

யாருக்கு நல்ல அறிவுரை கூறவேண்டும்?


விவேகசிந்தாமணி பாடல்: 10

"வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாவிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே"

பொருள் விளக்கம் :
ஒரு குரங்கு மழையில் நனைந்துகொண்டிருந்தது, அதனைப் பார்த்த தூக்கணாங் குருவி கவலைப் பட்டு அதனிடம் சொன்னது , நீயும் என்னைப் போல கூடு கட்டி இருந்தால் இப்படி மழையில் நனைந்து கொண்டு இருக்க வேண்டியது இல்லையே என்று. அதனால் ஆத்திரம் கொண்ட குரங்கு அந்த தூக்கணாங் குருவி கூட்டையே பிய்த்து எறிந்துவிட்டது. அதுபோல
நாம் படித்த அரிய நூல்களில் உள்ள பல நல்ல கருத்துகளை ஈன புத்தியுடைய கெட்டவர்களுக்கு சொல்லப் போனால் சொல்பவர்களுக்கே அது ஆபத்தாக முடியும்.

இதைத் தான் தெய்வப் புலவர் வள்ளுவர் இரண்டே அடியில் கூறியிருப்பார்

"புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்."

குறள் விளக்கம் :
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.

Tuesday, May 8, 2018

திருவாசகம் எனும் தேன்


வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்று அருட்ஜோதி இராமலிங்க வள்ளலாரால் உருகி உருகிப் பாராட்டப்பெறும் மாணிக்கவாசகர்.
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது மகாவாக்கியம். கல் நெஞ்சம் கொண்டாரையும் உருகச் செய்யும், நெகிழ்ந்து கரைய வைக்கும் பாக்கள் அவை.

திருக்கோத்தும்பி

கோத்தும்பி என்பது அரச வண்டு என்று பொருள்படும். அரச வண்டை அழைத்து, ‘இறைவன் திருவடிக்கமலத்தில் சென்று ஊதுவாய்’ என்று கூறுவது போலப் பாடப்பட்டுள்ளது

"பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ "
பொருள் விளக்கம்: கோத்தும்பீ - அரச வண்டே! பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரமனும், புரந்தரனும் - இந்திரனும், பொற்பு அமைந்த - அழகு அமைந்த, நா ஏறு செல்வியும் - பிரமனது நாவில் தங்கிய கலைமகளும், நாரணனும் - திருமாலும், நான்மறையும் - நான்கு வேதங்களும், மாவேறு சோதியும் - பெருமை மிகுந்த ஒளி வடிவினனாகிய உருத்திரனும், வானவரும் - மற்றுமுள்ள தேவர்களும், தாம் அறியா - தாம் அறியாவொண்ணாத, சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய திருவடிக் கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

"நானார்என் உள்ளமார் ஞானங்க ளார்என்னை யாரறிவார்
வானோர் பிரான்என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ"
பொருள் விளக்கம்: கோத்தும்பீ - அரச வண்டே! வானோர் பிரான் - தேவர் பெருமான், மதி மயங்கி - பேரருள் காரணமாக மனமிரங்கி, என்னை ஆண்டிலனேல் - என்னை ஆண்டருளாவிடின், நான் ஆர் - நான் என்ன தன்மையுடையவனாயிருப்பேன், என் உள்ளம் ஆர் - என் உள்ளம் என்ன தன்மையுடையதாயிருக்கும். ஞானங்கள் ஆர் - என் அறிவு எத்தன்மைய தாயிருக்கும், என்னை யார் அறிவார் - என்னைப்பற்றி யார் தெரிந்து கொள்ளப் போகிறார்கள், ஆதலின், ஊன் ஆர் உடைதலையில் மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்பலி தேர் - உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற, அம்பலவன் - அம்பலவாணனது, தேன் ஆர் கமலமே - தேன் நிறைந்த தாமரை போன்ற திருவடியின்கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

இளையராஜாவின் இசையில் இந்த பாடலை சிம்பொனி வடிவில் கேட்டால், அதை விட வேறு ஆனந்தம் இல்லை

https://www.youtube.com/watch?v=fr8mTh6jEwU

Monday, May 7, 2018

ஒளவையாருக்கும் கம்பருக்கும் நடந்த இலக்கியச் சண்டை

“” ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.
அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.
ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.
கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே கரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:
"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"
தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.
"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் கரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.
அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:
பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு
என்பதாகும் அவ்வரிகள்.
இதையும் சேர்த்து முழுப்பாடலாக,
"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு "
என்பதாகும்.
ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.
தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,
"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"
என்று மரியாதை இல்லாமல் இரட்டுறமொழிதல் விடுகதை கூறினார். இதற்கு பதிலாக ஔவையார்,
"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."
தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.
எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.
"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.
எவ்வளவு அருமையான புலமை விளையாட்டு பார்த்தீர்களா !! “”

Thursday, May 3, 2018

காளமேகப் புலவரின் சிலேடைப் பாடல்கள்


தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை கவி காளமேகத்தைப் பாடச்சொல்ல, காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.
"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா"
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).
அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.
"தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?"
தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?) என்னே அழகிய விதத்தில் பாடியுள்ளார்?!

வருமானமும் செலவும் குறித்து தெய்வப் புலவர் வள்ளுவரும், தமிழ் மூதாட்டி அவ்வையும் கூறியது


"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்"
தன் வருமானமறிந்து, சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, நிறைய இருப்பது போல் காட்சி தந்து ஒன்றுமே இல்லாமல் அழிந்துவிடும்.
"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை"
வரும் வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரச் செலவு அதிகமாக இல்லையென்றால் அவர் வாழ்வில் கெடுதி இல்லை.
"ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு"
"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...
விளக்கம்:
ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள்... அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்... எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர்.

Wednesday, May 2, 2018

கடவுள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியைத் தாண்டி, உலகில் கடவுள் நம்பிக்கை உள்ள  அனைவரும் தினமும் வணங்கும் கடவுள் உண்மையிலேயே எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று நாம் யோசித்துப் பார்த்ததுண்டா? எத்தனை மதங்கள், எத்தனை வழிபாட்டு முறைகள், எத்தனை நம்பிக்கைகள், இவை அத்தனையும் கடவுள் கேட்டுக்கொண்டிருகிறாரா? ஆம் என்றால் எந்த முறை சரியானது? இந்த கேள்வி என்னுள்ளே கேட்ட பொழுது, நான் தொடர்ந்து சிந்தித்த, என்னுடைய சில தனிப்பட்ட கருத்துக்களை கூறுகிறேன்.
கடவுள் இருக்கிறாரா என்றால் ஆம் இருக்கிறார் என்று கூறுகிறேன், இல்லாவிட்டால் இந்த உயிர், உலகம், அண்டம் எவ்வாறு சீராக இயங்குகிறது? இவை அனைத்தையும் தோற்றுவித்தது யார்? அவர் தான் கடவுள், அவரை நாம் இயற்கை என்றோ, அறிவியல் என்றோ, சிவன், விஷ்ணு, பிரம்மா, ஏசு, அல்லா, புத்தர்  என்றோ,  வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோம். அனால் அவர் ஒருவரே, அவர் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவர். இந்த மதங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்தும் மனிதனால் உருவாக்கப் பட்டவை. மனிதன் ஏன் மதத்தை உருவாக்கினான் என்றால், காட்டு மிராண்டிகளாக வாழ்ந்து கொண்டு, எதற்கும் அஞ்சாமல் உடல் பலத்தால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று வாழ்ந்த மனிதனை, நமக்கு மேலே கடவுள் ஒருவன் இருக்கிறான், அவன் இதை பார்த்துக்கொண்டிருக்கிறான், நாளை நீ அவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று பயத்தை ஏற்படுத்தி ஒழுக்கத்துடனும், அன்புடனும், உண்மையாகவும் வாழ்வதற்காக உலகின் வெவேறு பகுதிகளில் வெவேறான வடிவத்தில் மனிதனால் கற்பனையாக தோற்றுவிக்கப் பட்டதே இத்தனை மதங்கள்.
அப்படியென்றால் இறப்பிற்குப் பிறகு பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறு எந்த தண்டனையும் கிடைக்காதா, சொர்க்கம், நரகம், மறுமை நாள், அனைத்தும் பொய்யா என்றால், அதன் பதில் அது ஒரு உண்மையான பொய், அதை தான் வள்ளுவர்
"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"
என்று கூறியுள்ளார், அது பொய்யாக இருந்தாலும் நன்மையை விளைவிக்கும் நோக்கத்தில் சொல்லப் பட்டதால் அது உண்மையாகவே கருதப்படும்.
பிற உயிர்களின் மேல் காட்டும் அன்பு தான் கடவுள், நாம் பேசக்கூடிய உண்மை தான் கடவுள், நாம் பிறருக்கு செய்யக்கூடிய உதவி தான் கடவுள், கடவுள் வேறு எங்கும் இல்லை நம் உள்ளே தான் இருக்கிறார், இதைத்தான் சித்தர்கள் பின்வருமாறு பாடியுள்ளனர்.
"ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே"
உன்னுள்ளே கலந்துவிட்ட கடவுளைக் காணாமல் வெளியே தேடித்தேடி, கிடைக்காமல் இறந்துபோன மனிதர்கள் எண்ணற்ற கோடி என்கிறார்.
மேலும் கீழே உள்ள பாடலைப் பாருங்கள்
"நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"
சிலையை தெய்வமாக பூக்களால் அலங்கரித்து மந்திரம் கூறி வணங்குகிறாயே அந்த சிலை உன்னுடன் பேசுமா? இறைவனை உனக்குள்ளே இருக்கையில் அதை அறியாமல் இவ்வாறு செய்கிறாயே, அது எதை போல உள்ளதென்றால் ஒரு சுட்ட மண் சட்டியில் கறி சமைக்கிறாய், அந்த சட்டி அதன் சுவையை உணர முடியுமா? என்று கேட்கிறார்.
இதற்கு முடிவு தான் என்ன? நாம் கடவுளை நம் மதத்தின் அடிப்படையில் வணங்கக் கூடாதா? அது தவறா? என்றால், இல்லை அது தவறே இல்லை, அது ஒரு வழிமுறை தான், நம் கடவுளை அந்த உருவில் கண்டு, அந்தந்த வழியில் சென்று வணங்குகிறோம், இப்போது மதுரையிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டும், நாம் திண்டுக்கல் வழியாகச் செல்லலாம், திருச்சி வழியாகச் செல்லலாம், அல்லது வேறு ஏதாவது புதிய வழிகளில் செல்லலாம் ஆனால் நாம் சென்று சேர வேண்டிய இடம் சென்னை தான், அது போல் தான் இந்த மதங்களும், ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதையைப் போன்றது, நாம் இறுதியில் இறைவனைத் தான் சென்று சேருகிறோம்.
இதை உணர்ந்தால் நமக்குள் என் மதம் தான் உயர்ந்தது, உன் மதம் தான் உயர்ந்தது என்ற மத சண்டையே வராது. அனைத்து மதங்களின் நோக்கம் ஒன்று தான் சாராம்சம் ஒன்று தான் வழிகள் தான் வேறு.
பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுங்கள்,  உண்மையே பேசுங்கள், பிறருக்கு இயன்ற அளவில்  உதவி செய்யுங்கள், கடவுள் வேறு எங்கும் இல்லை நம் உள்ளே தான் இருக்கிறார்.
உளமே கடவுள், ஊணுடம்பே ஆலயம்.   

Monday, April 30, 2018

வருமானமும் செலவும் குறித்து தெய்வப் புலவர் வள்ளுவரும், தமிழ் மூதாட்டி அவ்வையும் கூறியது

"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்"
தன் வருமானமறிந்து, சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, நிறைய இருப்பது போல் காட்சி தந்து ஒன்றுமே இல்லாமல் அழிந்துவிடும்.
"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை"
வரும் வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரச் செலவு அதிகமாக இல்லையென்றால் அவர் வாழ்வில் கெடுதி இல்லை.
"ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு"
"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...
விளக்கம்:
ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள்... அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்... எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர்.

Thursday, April 5, 2018

பாஜக நடத்தும் நாடகம்


உண்மை தெரியாமல் அல்லது தெரிந்தும் மௌனியாய் இருப்பவர்களே, கேளுங்கள், பாரத் மாதா கி ஜே ! என்று கூறுவது, திரை அரங்கில் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்பது, என்று தேசப்பற்றை வலிந்து ஊட்டுவது, இது தான் தேசப்பற்றா? உண்மையில் இந்திய தேசப்பற்றுக்கும் பாஜக கட்சிக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை, பாஜக வை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் என்று கட்டமைக்கப் படுகிறார்கள், பழைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பாஜகவினர் சாவர்க்கர், கோட்சே வழி வந்தவர்கள் என்பது தெரியும், வெள்ளையர்களுக்கு எதிராக சுதந்திரப்  போர்  புரியாதவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள், தேசத்தந்தையை சுட்டுக்கொன்றவர்கள், இவர்களுக்கு சுதந்திர இந்தியாவை சொந்தம் கொண்டாட எந்த அருகதையும் இல்லை.

அதே போல் இந்து மதத்திற்கும் அவர்கள் தான் காவலன் என்பது போல் காட்டப்படுகிறது, நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் எந்த இந்துத்துவா இயக்கங்களும் இல்லாமல் தான் இருந்தது, ஆனால் பல்லாயிரம் வருடங்களாக இந்து மதம் சனாதன தர்மம் என்று இயங்கி வருகிறது, முகலாயர்கள் காலத்திலோ, வெள்ளையர்கள் ஆட்சியிலோ அது அழிந்து விட வில்லை. ஆனால் இந்த கொள்ளையர்களால் இன்று அவமானப்பட்டு கிடக்கிறது.
இந்தியாவின் சிறப்பம்சமே, வேற்றுமையில் ஒற்றுமை தான், அதன் பன்முகத்தன்மையை சிதைத்து இந்து மதம் என்ற ஒற்றை மதத்தை நோக்கியும், இந்தி மொழி என்ற ஒற்றை மொழியை நோக்கியும் நகர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது, இது மிகப் பெரிய பேராபத்து, இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் இந்தியா உடையும்.
சொந்தத் தாய் மண்ணில் ஒருவன் அகதியைப் போல் நடத்தப்பட்டால் அவன் பொங்கி எழத்தான் செய்வான். அவன் ஆயுதத்தை தூக்கத் தான் செய்வான், அது தான் உலகில் காலம் காலமாக நடந்து வந்திருக்கிறது, அது தான் இன்றும் நடந்து  கொண்டிருக்கிறது. தடி எடுத்தவனெல்லாம்,தண்டல் காரன் ஆகிவிட முடியாது, இன்று வரை நம்மில் தொண்ணூறு சதவீதம் பேர் குண்டு வெடிப்பையும் துப்பாக்கி சூட்டையும் நேரில் சந்தித்தவர்கள் கிடையாது, அதில் நமது கை கால்களையோ சொந்தங்களையோ இழந்தவர்கள் கிடையாது, அந்த மோசமான அனுபவம் இல்லாமல் அமைதியான நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இதைக் கெடுத்து அமைதியைக் குலைத்து  நாட்டை சுடுகாடாக்கி விடுவார்கள் இந்த பாவிகள். இந்த நாசக்காரர்களை இந்த பாரத புண்ணிய மண்ணை விட்டே விரட்ட வேண்டும். அது இன்றைய இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களே எச்சரிக்கை தேவை.
பசித்திரு! தனித்திரு !! விழித்திரு !!!

Tuesday, March 20, 2018

தமிழ்நாடு இந்துக்களுக்கு எதிரானதா? இல்லை, இந்துத்வாவிற்கு எதிரானது, ஏன் ?

ராமராஜ்ஜியம் ரத யாத்திரை என்னுடைய பார்வை

ஏன் இந்த எதிர்ப்பு தமிழகத்தில் மட்டும்?

தமிழ்நாடு இந்துக்களுக்கு எதிரானதா? இல்லை, இந்துத்வாவிற்கு எதிரானது, ஏன் ?

அறுபத்தி மூன்று நாயன்மார்களும், பன்னிரு ஆழ்வார்களும் பிறந்த மண் இது, பக்தியுடன், மொழியையும் வளர்த்தவர்கள் நாங்கள், தமிழகத்தில் உள்ள இத்தனை பழமையான கோவில்களைப் போல் வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா? மிருகமாகத் திரிந்தவனை மனிதனாக்க தோற்றுவிக்கப் பட்டதே மதம், ஆனால் இன்றோ நீங்கள் மதம் பிடித்து மிருகமாகத் திரிகிறீர்கள். எங்களுக்கு பெரியார் பேச்சுக்கு கைதட்டி ரசிக்கவும் முடியும், அப்படியே கோவிலுக்குச் சென்று மனதார வணங்கவும் முடியும், அது தான் பகுத்தறிவு. அது தமிழர்களுக்கே உரித்தானது. இன்று தமிழர்களின் பெயர்க்குப் பின்னால் ஜாதிப் பெயர்  இல்லாமல் இருக்கிறதே, வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி இருக்கிறதா? தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு என்று சும்மாவா கூறினார்கள் ?

இதே போல, இந்தியாவில் நபி வழி ராஜ்ஜிய ரத யாத்திரை, ஏசு வழி ராஜ்ஜிய ரத யாத்திரை என அனைத்து மாநிலங்களிலும் அமைதியாக ஊர்வலம் போக முடியுமா ?
இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல, இங்கு வாழும் அனைத்து மத, இன மற்றும் மொழி  சார்ந்த மக்களுக்கும் பொதுவான ஒரு மத சார்பற்ற நாடு. நம் முன்னோர்கள் இரத்தம் சிந்தி வெள்ளையர்களிடமிருந்து பெரும் கனவுகளோடு பெற்றுத் தந்த மத சார்பற்ற நமது பாரதத்தை இது போன்ற ரத யாத்திரைகளால் ரத்த பூமியாக மாற்றி விடாதீர்கள்.
நீங்கள் பதவி ஆசை காட்டி தமிழகத்தின் ஆட்சியாளர்களை அடிமைப் படுத்தலாம், ஆனால் தமிழர்களை ஒரு போதும் அடிமைப் படுத்த முடியாது. 

Sunday, February 4, 2018

என் மனம் கவர்ந்த குறள்கள் சில - அறத்துப்பால்

அறத்துப்பால்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்
உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர்
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 
என்நோற்றான் கொல்எனும் சொல்
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய்
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
ஆரிருள் உய்த்து விடும்
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
நாவினாற் சுட்ட வடு
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கம் ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது என்பதால், அதை உயிரைக் காட்டிலும் மேலானதாக காக்க வேண்டும்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் 
கேடும் நினைக்கப் படும்
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு
தமக்கு நீரைத் தருகின்ற மேகங்களுக்கு உயிர்கள் என்ன கைம்மாறு (பதில் உதவி) செய்கின்றன? அதுபோல் மேகங்கள் போன்ற பெரியவர்கள் செய்கின்ற ஒப்புரவுகளும் கைம்மாறு எதிர்பார்ப்பன அல்ல.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, உயிர்கள்மேல் அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லு மிடத்து
தன்னைவிட கீழானவர்களை, மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட மேலானவர், வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
தீமை இலாத சொலல்
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட உண்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்து ளெல்லாம் உளன்
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை 
வாய்மையால் காணப் படும்
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் உண்மை வேண்டும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 
தன்னையே கொல்லுஞ் சினம்
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா 
பிற்பகல் தாமே வரும்
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு

எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.

Sunday, January 28, 2018

தமிழ் மூதாட்டி அவ்வையின் எக்காலத்திற்கும் பொருந்தும் நற்பாடல்கள் சில

அவ்வையார் நூல்கள்

மூதுரை


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

1
தென்னைமரம் தன் கால்களில் நீரை உண்டுவிட்டுத் தலையால் இளநீரைத் தரும். அதுபோல ஒருவர் செய்த உதவி நன்றியாகத் தானே வந்து சேறும். என்று தருவார் என்று காத்திருக்கக் கூடாது. 


நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

2
நெஞ்சில் ஈரம் உள்ள நல்லவர்க்கு உதவி செய்தால் அது அவர்களின் நெஞ்சில் கல்லில் பொளித்து எழுதிய எழுத்துப் போல அழியாமல் நிலைத்திருக்கும். நெஞ்சில் ஈரமில்லாதவர்களுக்கு உதவினால் அவர்கள் அதனைத் தண்ணீரில் எழுதும் எழுத்து எழுதும்போதே மறைந்துவிடுவது போல அப்போதே மறந்துவிடுவார்கள். 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

4
காய்ச்சினாலும் பால் சுவை குன்றாது. அதுபோல நல்ல நண்பர்கள் நட்பால் துன்பம் அடைந்தாலும் விலகமாட்டார்கள். நன்னட்பு இல்லாதவர் துன்பம் வரும் காலத்தில் மாறிவிடுவர். வெள்ளை நிறம் கொண்ட சங்கு சுட்டாலும் சுண்ணாம்பாக மாறி வீட்டில் அடிக்கும்போது வெள்ளை நிறத்தையே தரும். அதுபோல வறுமையுற்றுக் கெட்டுப்போனாலும் மேன்மக்கள் மேன்மக்களாகவே திகழ்வர். 


அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

5
எவ்வளவு பெரிய ஓங்கி உயர்ந்த மரமானாலும் அதன் பருவ காலத்தில்தான் பழுக்கும். அதுபோல அடுத்தடுத்து முயன்றாலும் செயல் நிறைவேற வேண்டிய காலம் வந்தால்தான் நாம் எடுத்துத் தொடுத்த (தொடங்கிய) செயல் நிறைவேறும். 


நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

8
நல்லவர்களைக் காண்பதுவும் நல்லது. நல்லவர்களின் சொல் நன்மை மிகுந்திருக்கும். எனவே அதனைக் காதால் கேட்பதும் நல்லது. நல்லவர்களின் நற்குணங்களை பிறருக்கு எடுத்துச் சொல்வதும் நல்லது. நல்லவர்களோடு சேர்ந்திருப்பதும் நல்லது. 


தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

9
தீயவர்களைக் கண்ணில் காண்பதுவும் தீது. யாவரும் விரும்பும் தன்மை இல்லாத தீயவர்களின் சொல்லைக் காதால் கேட்பதுவும் தீது. தீயவர் ஒருவரின் குணத்தை வேறொருவரிடம் சொல்வதும் தீது. தீயவரோடு நட்புக் கொண்டிருப்பதும் தீது. 


நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

10
நல்லவர் ஒருவர் இருந்தால் அவருக்காக மழை பொழியும். மழை போன்ற கொடை வழங்கப்படும். இறையருளால் வழங்கப்படும். அந்த மழை நல்லவர் அல்லாதவருக்கும் பயன்படும். எப்படி? உழவன் நெல்லம்பயிருக்கு நீர் இறைக்கிறான். அந்த நீர் வாய்க்காலின் வழியே ஓடுகிறது. வாய்க்கால் கரையில் உள்ள புல்லுக்கும் அந்த நீர் உதவுகிறது. அதுபோல இறையாற்றல் நல்லவருக்கு வழங்கும் கொடை அல்லாதவருக்கும் பயன்படும். இதுதான் உலக இயற்கை. தீயவர் நலம் பெறுவது இதனால்தான். 

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

14
காட்டிலே மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழிதன்னையும் அந்த மயிலாகப் பாவனை செய்துகொண்டு, தன் பொலிவு இல்லாத சிறகுகளை விரித்துஆடினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது கல்வி அறிவு இல்லாத ஒருவன் கற்றறிந்தவன் பாட்டைக் கேட்டுப் பழகிக்கொண்டு பாடுவது. (கற்றவன் பாடலுக்கு உரிய ஆழ்ந்த பொருளைச் சொல்ல முடியும். கல்லாதவன் சொல்லமுடியுமா) 


அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

16
தன்னடக்கத்துடன் இருப்பவரைப் பார்த்து “இவர் அறிவில்லாதவர்” என்று எண்ணி அவரை வெல்ல நினைக்கவும் கூடாது. நீர் பாயும் மடை வாயிலில் சிறிய மீன்கள் ஓடும்போது வாட்டத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் கொக்கு பெரிய மீன்வந்ததும் கௌவிக்கொள்வது போன்றது வலிமை உடையவரின் அடக்கம் என உணர்ந்துகொள்ள வேண்டும். 

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.

17
நீர் அற்றுப்போன குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் நீங்கிவிடும். அதுபோலத் துன்பம் வந்த காலத்திலில் விலகிப் போய்விடுபவர் உறவினர் ஆகமாட்டார். நீர் அற்றுப்போனாலும் அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற பூக்கொடிகள் ஒட்டிக்கொண்டே இருப்பது போலத் துன்பம் வந்த காலத்திலும் துணைநின்று உதவுபவரே உறவுக்காரர் ஆவார். 

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

19
ஆழமான கடலில் அளவற்ற நீர் இருக்கிறது. படி ஒன்றை அதில் அமுக்கி அமுக்கி மொண்டாலும் நாலு படி நீரை அந்தப் படியால் முகந்துகொள்ள முடியாது. அதுபோலத்தான் துய்க்கும் வாழ்க்கை அளவும் இருக்கும். அது விதியின் பயன். விதியின் அளவு. ஏராளமான செல்வம் இருந்தாலும் அத்தனையும் அனுபவிக்க முடியுமா? நல்ல கணவன் இருந்தாலும் அனுபவிக்க முடியுமா? 

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.
20
உடன் பிறந்தவர் மட்டுமே சுற்றத்தார் என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. சர்க்கரை-நோய் போன்ற சில வியாதிகள் நாம் பிறக்கும்போதே நம்முடன் சேர்ந்தே பிறந்து நம்மைக் கொல்கின்றன. நம்முடன் பிறக்காமல், பெரிய மலையில் எங்கோ பிறந்து வளர்ந்த மூலிகை, இடையிலே நம்மை வந்து தாக்கும் பிணியைப் போக்குகின்றன. இந்த மருந்து போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள். 


இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.

21
மனைவி வீட்டில் இருந்தால், கணவனுக்கு இல்லாத பொருள் ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளாக இருந்து பயன்படுவாள். அந்த மனைவி பண்பு இல்லாதவளாக இருந்தால், எதற்கெடுத்தாலும் முரண்பாடாகவே பேசிக்கொண்டிருந்தால், அந்த நிலையில் அவன் வாழும் வீடு புலி பதுங்கியிருக்கும் புதராக மாறிவிடும். 


நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

24
அன்னம் தாமரை பூக்கும் குளத்துக்குப் போய்ச் சேரும். அது போலக் கற்றாரைக் கற்றார் விரும்பி ஒன்றுசேர்வர். பிணத்தை எரிக்காமலும் புதைக்காமலும் போடும் முதுகாட்டிற்கு விரும்பிச் சென்று காக்கை பிணத்தை உண்ணும். அதுபோலக் கல்வி அறிவு இல்லாத மூர்க்கரை மூர்க்கரே விரும்பிச் சென்று சேர்ந்துகொள்வார்கள். கற்பு = கற்றல். 


மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.

26
மன்னனையும் மாசு போகக் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவன் சிற்றப்புடையவன். எப்படி என்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு. 


கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.

27
படிப்பறிவு இல்லாதவர்களுக்குப் படித்தறிந்தவர் சொல்லும் சொல் கூற்றம். அறநெறியைப் பின்பற்றாதவர்களுக்கு பிறர் பின்பற்றும் அறநெறி கூற்றம். வாழை மரத்துக்குத் தான் ஈன்ற காய் கூற்றம். இல்லத்தாரோடு சேர்ந்துபோகாமல் முரண்பட்டு நிற்கும் பெண் நல்வாழ்வுக்குக் கூற்றம். கூற்றம் = சாகடிக்கும் தெய்வம். 



நல்வழி

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

2
பட்டறிவு கண்டு வைத்துள்ளபடியும், நீதி தவறாத நெறிமுறைப்படியும் பறைசாற்றினால், இந்த உலகில் இருப்பவை இரண்டே சாதியைத் தவிர வேறு இல்லை. இல்லாதவர்களுக்குக் கொடுப்பவர்கள் பெரியோர் ஆவர். அவர்கள் உயர்ந்த சாதி. கொடுக்காதவர்கள் தாழ்ந்த சாதி. 


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும்.

10
இறந்தவரை எண்ணி ஆண்டுக்கணக்கில் அழுது புரண்டாலும், இறந்தவரின் நினைவுநாள் ஆண்டு அண்டு தோறும் வரும்போதெல்லாம் இறந்தவரை நினைத்துக்கொண்டு அழுது அழுது புரண்டாலும், மாண்டுபோனவர் திரும்பி வருவது இல்லை. மாயிலத்தில் உள்ளவர்களே! அழவேண்டா. நமக்கும் அவர் போன அதே வழிதான். எனவே, எனக்கு இவை எதற்கு என்று எண்ணி மற்றவர்களுக்கு உணவிட்டுத் தானும் உண்டு வாழ்ந்துகொண்டிருங்கள். நாம் போகும் வரை இட்டும் உண்டும் வாழ்ந்துகொண்டிருங்கள். 


ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு.

12
ஆற்றங்கரையில் ஆற்றுநீரை உண்டுகொண்டு வளமோடு இருந்த மரமும் ஒருநாள் விழுந்துவிடும். அரசனே எண்ணிப் பார்க்கும்படி பெருமிதத்தோடு வாழ்ந்த வாழ்வும் ஒருநாள் விழுந்துவிடும். பின் எதுதான் விழாது என்கிறீர்களா? உழுது, அதன் விளைச்சலை உண்டு வாழ்தலே ஏற்றம். பெருமை. இதற்கு ஒப்பான வாழ்வு வேறு எதுவும் இல்லை. வேறு எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குப் பழுது உண்டு. 

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும்.

14
பிச்சை எடுக்கும் வாழ்க்கை மிகமிக இழிவு. அந்த வாழ்க்கைக்கு மூத்த குடிவாழ்க்கை எது தெரியுமா? சொல்கிறேன் கேள். பலப்பல ஆசைகளைக் காட்டி கேட்போர் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இடித்து நப்பாசை கொள்ளும்படிச் செய்து அவர்கள் தரும் பொருளால் தன் வயிற்றை வளர்த்தல் ஆகும். சீச்சீ! இப்படி வாழ்வது மானக்கேடு. இந்த மானக்கேட்டோடு வாழ்வதைக் காட்டிலும் தன் உயிரை விட்டுவிடுவது மேலானது. 



செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!

17
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் வையத்து அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று வெறும்பானை பொங்குமோ மேல் வெறும் பானை பொங்குமோ? (உலையில் அரிசி போட்டு அடுப்பு எரித்தால்தானே சோறு பொங்கும்.) அதுபோல, முன்பு கொடுத்து வைத்திருந்தால்தானே இன்று செல்வம் நமக்குத் திரும்ப வந்து சேறும். பாவம் செய்துவிட்டு, முயன்று ஈட்டியும் பணம் சேரவில்லையே என்று தெய்வத்தை நொந்துகொள்வதால் என்ன பயன். 


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?

22
பணத்துக்காகப் பாடுபட்டுகின்றனர். பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய பணத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து வைக்கின்றனர். அனுபவிக்காமல் மறைத்து வைக்கின்றனர். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டு உங்கள் ஆவி போன பின்பு அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்? பாவிகளே! சொல்லுங்கள். 

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.

23
பொதுமக்கள் கூடியிருக்கும் மன்றத்தில் நடுவு நிலைமையோடு (நடுநிலையோடு) சாட்சியோ (கரி), தீர்ப்போ கூறவேண்டும். அப்படிக் கூறாமல் வாதாடுவோரில் ஒருவர் பக்கம் அவரது நன்மையை மட்டும் கருத்தில் கொண்டோ, செல்வாக்கைக் கருதி அவரிடம் அச்சம் கொண்டோ ஓரவஞ்சனையாக எதுவும் சொல்லக்கூடாது. இப்படி ஓரம் சொன்னால், அவர் வீட்டில், அச்சுறுத்தும் ஆவி வேதாளம் சேரும். வெள்ளை எருக்கு பூக்கும். பாதாள மூலி (பாசி, பாசான்) படரும். செல்வச் செழிப்பைச் சேரவொட்டாமல் தடுக்கும் மூதேவி வலியச் சென்று இருந்துகொண்டு வாழ்வான். பாம்புகள் குடியேறும். இப்படியெல்லாம் வீடு பாழாகப் போய்விடும். 


நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.

24
திருநீறு இல்லாத நெற்றி பாழ். நெய் இல்லாத உணவு பாழ். பாயும் ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ். கருத்து மாறுபாடு இல்லாத உடன்பாறப்பாளர் இல்லாத உடம்பு பாழ். (துணை வேண்டுமே) மனைவி இல்லாத மனை பாழ். பாழ் = 0, பாழ் = ஒன்றுமில்லாத வெற்றிடம். 
 
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

25
தேடி முதலாக வைத்திருக்கும் பொருளை விட அதிகமாக ஒருவன் செலவு செய்தால் என்ன ஆகும். தன்மானம் அழிந்துபோகும். புத்தி கெட்டுச் செயல்படுவான். அவன் எங்குச் சென்றாலும் அங்குள்ள அனைவர்க்கும் திருடனாகத் தென்படுவான். ஏழு பிறப்பிலும் கொடியவனாக மாறிவிடுவான். எண்ணிப்பார். உண்மை விளங்கும்.


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.

26
மானம் = தன்மான உணர்வு, குலம் = குலப்பெருமை பற்றிய சிந்தனை, கல்வி = கற்ற கல்வியின் திறமை, வண்மை = உடல் வளம், அறிவுடைமை = எண்ணிப் பார்க்கும் அறிவு, தானம் = கொடை வழங்கும் வள்ளல் தன்மை, தவம் = தவம் செய்யும் அறநெறி, உயர்ச்சி = உயர்வு பற்றிய எண்ணம், தாளாண்மை = செயலாற்ற முயலுதல், தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் = தேனைப் போல் பேசும் பெண்மீது ஆசைப்படுதல் ஆகிய பத்தும் பசி வந்திடப் பறந்து போம். 

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.

28
உண்பது நாள் ஒன்றுக்கு ஒரு நாழி அளவு தானியத்தால் சமைத்த உணவு. இடையில் அற்றம் மறைக்க ஒருவர் உடுத்திக் கொள்வது நான்குமுழத் துணி. என்னுவன எண்பது கோடி நினைவுகள். கண் புதைந்துபோயிருக்கும் மாந்தர்கள் நாம். நாம் குடும்பம் நடத்துகிறோமே அந்தக் குடிவாழ்க்கையானது, மண்ணால் செய்த பாண்டம் போன்றது. (நம் உடம்பும் மண்ணால் செய்த பாண்டம் போன்றது. எப்போது கீழே விழுந்து உடையுமோ தெரியாது). இந்த உண்கலம் போலச் சாம் துணையும் நம் உடம்புக்கும், வாழ்க்கைக்கும் கவலைகள்தாம். சஞ்சலம் = கவலை, கலம் = பாண்டம், பாத்திரம். 


கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

34
கையிலே பொருள் வைத்திருப்பவன் ஆயின், அவன் கல்வி அறிவு இல்லாதவன் ஆனாலும், அவன் வரும்போது அவனிடம் எல்லாரும் சென்று எதிர்கொண்டு வரவேற்பர். கையில் பொருள் இல்லாத ஏழையாக வாழ்ந்தால், அவனை மனைவியும் விரும்பமாட்டாள்; பெற்றெடுத்த தாயும் விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் செல்லாக் காசுகள் ஆகிவிடும். 



நாலு கோடிப் பாடல்கள்

ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார்.

"நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்" இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்" என்று அவர்கள் கூறினராம்.

இதைக்கேட்ட ஔவையார், "இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்" என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும்

"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்"

தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.
 


"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் 
உண்ணாமை கோடி பெரும்"

உண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)
 


"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே 
கூடுதலே கோடி பெறும்"

கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.
 


"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக் 
கோடாமை கோடி பெறும்"


எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்.