Tuesday, January 23, 2018

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

அன்று பிரித்தாளும் சூழ்ச்சியால் சிதறிக்கிடந்த இந்தியாவை ஒட்டுமொத்தமாக கைப்பற்றினார்கள் வெள்ளையர்கள்
இன்று அதே பிரித்தாளும் சூழ்ச்சியால் ஒன்றுபட்ட இந்தியாவை சிதறடக்கின்றனர் இந்தக் கொள்ளையர்கள்
மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அரசனிடம் முறையிடலாம், அந்த அரசனே பிரச்சனை என்றால் யாரிடம் சென்று முறையிடுவது
திக்கற்றோர்க்கு தெய்வமே துணை.
இறைவா எங்களை இந்தக் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்று
எளியோரை வலியோர் அடித்தால், வலியோரை வல்லூறு அடிக்காதா.
அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொல்லும்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், நல்லவர்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன்"
அவதரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, இன்னொரு 2019 வெற்றியை இந்த பாரதம் தாங்காது.

இன்றைய அரசியல்வாதிகளின் நிலை குறித்து அன்றே அவ்வை கூறியுள்ளார் 

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

யாருக்குப் பயம் வரும் ? யாரிடம் தேவை அதிகமாய் இருக்கிறதோ அவர்களுக்கு பயம் அதிகம் இருக்கும்

தேவைகள் அதிகம் ஆகும்போது, அதற்கு நிறைய பணம் வேண்டும். பணம்  சம்பாதிக்க யார்  யாரை எல்லாமோ பார்த்து பல்லை காண்பிக்க வேண்டி இருக்கிறது, எல்லோரிடமும் பயப் பட வேண்டி இருக்கிறது, யார் என்ன செய்வானோ என்ற பயம் பிடித்து ஆட்டும்

மனதிற்குள் வைத்தாலும் வெளியில் ஆசை ஆசையாகப் பேச வேண்டி இருக்கிறது

யாரிடம் என்ன உதவி கேட்கலாம் என்று மனம் கணக்கு போட்டுக் கொண்டே இருக்கிறது

அவ்வையார் சொன்னார்....

பிச்சை எடுப்பது கேவலம்.

அதை விட கேவலமான ஒன்று இருக்கிறது


அது தான், மற்றவர்களிடம் ஆசை வார்த்தை சொல்லி , அவர்களிடம் பலன் பெற்று உயிர் வாழ்வதுஅதை விட சாகலாம் என்கிறார்

பேலியோ டயட் பற்றி நான் எழுதியது

நம்தாத்தா காலத்தில் கொழுப்பே இல்லாத மாவுச்சத்து அடங்கிய உணவு தானே தினமும்உண்டார்கள் (மூன்று வேளையும் சோறு, கூழ், களி போன்று) அவர்களுக்கு ஏன் சுகர், பிரஷர் போன்றவை அதிகமாக வரவில்லை ?
அந்த காலத்தில் சுகர் என்பதே பணக்கார வியாதி என்பார்கள், ஏன் என்றால் பணக்காரர்கள் உடல் உழைப்பு இல்லாமல் நன்றாக மூக்கு பிடிக்க சாப்பிடுவதால் உண்டாவது தான் அது. என்னைப் பொறுத்தவரை உடல் உழைப்பு இல்லாமை, ரசாயன உரங்கள் கலந்த உணவுப் பொருட்களால் வந்த நோய்கள் தான் இவை.
 என்றைக்கு பசுமைப்புரட்சி என்று யூரியா, பொட்டாசியம் போன்ற ரசாயன உரங்களால் மூன்று போகம் நெல் விளைச்சல் நடக்கத் தொடங்கியதோ,
வெண்மைப் புரட்சி என்று நாட்டு மாட்டினங்களை விட்டு ஜெர்ஸி பசு வந்து எட்டு,பத்து லிட்டர் பால் கிடைக்கத் தொடங்கியதோ அன்றிலிருந்து தான் இந்த சுகர், பிரஷர் போன்ற நோய்கள் வரத் தொடங்கின.
இது போதாமல் உடல் உழைப்பு வேறு இல்லாமல் ஏசி காற்றில் உட்கார்ந்து கொண்டிருந்தால் நோய்கள் வராமல், வேறு என்ன வரும் ?, அடிப்படையில் தவறை வைத்துக் கொண்டு அதை சரி செய்யாமல் வேறு என்ன செய்தும் பயன் இல்லை.
பசி என்று உடல் கூற வேண்டும், நாம் இப்போது நேரத்திற்கு தான் உண்கிறோம், பசி வந்து உண்பது அரிதாகி விட்டது. இயற்கை உரங்கள் கொண்டு செய்யக் கூடிய இயற்கை விவசாயமும், உடல் உழைப்பும், அது முடியா விட்டால் உடற்பயிற்சியும் தான் இதற்குத் தீர்வு. உடல் நலம் பேண வேண்டுமென்றால் இதை செய்து தான் ஆக வேண்டும். நோகாமல் நொங்கு தின்ன நினைத்தால் நோய்கள் வரத்தான் செய்யும்.
நேரம் கடந்து உண்ணக்கூடாது பசிக்கும் முன்னும் உண்ணக்கூடாது.
நேரங் கடந்து உண்பதால், குடற்புண்ணும், உடற்சோர்வும், மயக்கமும் ஏற்படும். பசிக்கும் முன்பே உண்பதால் முன்பு உண்ட உணவு செரிக்காத நிலையில், புதிய உணவு கலந்து செரிமானப் பாதிப்பையும் நோய்களையும் உருவாக்கும். எனவேதான், பசித்துப் புசி என்றனர்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்பது வள்ளுவனின் வாக்கு, அதாவது நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் மூலக் காரணத்தை ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

குடிக்கும் நீரும், சுவாசிக்கும் காற்றும், உண்ணும் உணவும் ரசாயனம் கலந்து மாசாகி விட்டது, இந்த அடிப்படைத் தவறை கலையாமல் வேறு எந்த முயற்சி எடுத்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் போலத் தான்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு.