Monday, April 30, 2018

வருமானமும் செலவும் குறித்து தெய்வப் புலவர் வள்ளுவரும், தமிழ் மூதாட்டி அவ்வையும் கூறியது

"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்"
தன் வருமானமறிந்து, சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, நிறைய இருப்பது போல் காட்சி தந்து ஒன்றுமே இல்லாமல் அழிந்துவிடும்.
"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை"
வரும் வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரச் செலவு அதிகமாக இல்லையென்றால் அவர் வாழ்வில் கெடுதி இல்லை.
"ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு"
"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...
விளக்கம்:
ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள்... அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்... எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர்.

Thursday, April 5, 2018

பாஜக நடத்தும் நாடகம்


உண்மை தெரியாமல் அல்லது தெரிந்தும் மௌனியாய் இருப்பவர்களே, கேளுங்கள், பாரத் மாதா கி ஜே ! என்று கூறுவது, திரை அரங்கில் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்பது, என்று தேசப்பற்றை வலிந்து ஊட்டுவது, இது தான் தேசப்பற்றா? உண்மையில் இந்திய தேசப்பற்றுக்கும் பாஜக கட்சிக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை, பாஜக வை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் என்று கட்டமைக்கப் படுகிறார்கள், பழைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பாஜகவினர் சாவர்க்கர், கோட்சே வழி வந்தவர்கள் என்பது தெரியும், வெள்ளையர்களுக்கு எதிராக சுதந்திரப்  போர்  புரியாதவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள், தேசத்தந்தையை சுட்டுக்கொன்றவர்கள், இவர்களுக்கு சுதந்திர இந்தியாவை சொந்தம் கொண்டாட எந்த அருகதையும் இல்லை.

அதே போல் இந்து மதத்திற்கும் அவர்கள் தான் காவலன் என்பது போல் காட்டப்படுகிறது, நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் எந்த இந்துத்துவா இயக்கங்களும் இல்லாமல் தான் இருந்தது, ஆனால் பல்லாயிரம் வருடங்களாக இந்து மதம் சனாதன தர்மம் என்று இயங்கி வருகிறது, முகலாயர்கள் காலத்திலோ, வெள்ளையர்கள் ஆட்சியிலோ அது அழிந்து விட வில்லை. ஆனால் இந்த கொள்ளையர்களால் இன்று அவமானப்பட்டு கிடக்கிறது.
இந்தியாவின் சிறப்பம்சமே, வேற்றுமையில் ஒற்றுமை தான், அதன் பன்முகத்தன்மையை சிதைத்து இந்து மதம் என்ற ஒற்றை மதத்தை நோக்கியும், இந்தி மொழி என்ற ஒற்றை மொழியை நோக்கியும் நகர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது, இது மிகப் பெரிய பேராபத்து, இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் இந்தியா உடையும்.
சொந்தத் தாய் மண்ணில் ஒருவன் அகதியைப் போல் நடத்தப்பட்டால் அவன் பொங்கி எழத்தான் செய்வான். அவன் ஆயுதத்தை தூக்கத் தான் செய்வான், அது தான் உலகில் காலம் காலமாக நடந்து வந்திருக்கிறது, அது தான் இன்றும் நடந்து  கொண்டிருக்கிறது. தடி எடுத்தவனெல்லாம்,தண்டல் காரன் ஆகிவிட முடியாது, இன்று வரை நம்மில் தொண்ணூறு சதவீதம் பேர் குண்டு வெடிப்பையும் துப்பாக்கி சூட்டையும் நேரில் சந்தித்தவர்கள் கிடையாது, அதில் நமது கை கால்களையோ சொந்தங்களையோ இழந்தவர்கள் கிடையாது, அந்த மோசமான அனுபவம் இல்லாமல் அமைதியான நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இதைக் கெடுத்து அமைதியைக் குலைத்து  நாட்டை சுடுகாடாக்கி விடுவார்கள் இந்த பாவிகள். இந்த நாசக்காரர்களை இந்த பாரத புண்ணிய மண்ணை விட்டே விரட்ட வேண்டும். அது இன்றைய இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களே எச்சரிக்கை தேவை.
பசித்திரு! தனித்திரு !! விழித்திரு !!!