Wednesday, January 24, 2018

உள்ளம் கவர்ந்த பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும் -- முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், -- காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் -- தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், -- தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் -- ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், -- வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் -- பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவனேனும், தமிழும் -- நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!



ன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் ! -- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் !
தமிழுக்கு நிலவென்றுபேர்! -- இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !
தமிழுக்கு மணமென்று பேர் ! -- இன்பத்
 
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !
தமிழுக்கு மதுவென்று பேர்! -- இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -- இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் !
 
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -- இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -- இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -- இன்பத்
 
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ



சங்க நாதம்

   எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
   மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
   எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்:
   இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
                           உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்தமிழுடன் பிறந்தோம்
 
                           நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
                           முழங்கு சங்கே!

   சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
   தீராதி தீரரென்று ஊதூது சங்கே! 
   பொங்கும் தமிழர்க்கின்னல் விளைத்தால்
   சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
                           வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
 
                           எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனில்கமழ்ந்து லீரஞ்செய்கின்றதமிழ்
                           எங்கள் மூச்சாம்! (எங்)


வாழ்வில் உயர்வுகொள்! 

சேசு முகம்மது என்றும்! -- மற்றும்

சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென் றும்,

பேசி வளர்க்கின்ற போரில் -- உன்

பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்!
 

காசைப் பிடுங்கிடுதற்கே -- பலர்

கடவுளென் பார்!இரு காதையும் மூடு!

கூசி நடுங்கிடு தம்பி! -- கெட்ட

கோயிலென்றால்ஒரு காதத்தி
 ல்ஓடு! 



ஆய்ந்து பார்!! 

சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
சமயபே தம்வளர்த்தே தளர்வது நன்றா?
மாந்தரிற் சாதிவகுப்பது சரியா?
 
மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?

வாய்ந்தபோர்க் குறிபோல் மதக்குறி இனிதா?
மனமொழி மெய்ஒன்றி மகிழுதல் இனிதா?
ஆய்ந்துபார் நெஞ்சமே அமைதிதான் சிறப்பா?
அண்டை வீட்டைப்பறிக்கும் சண்டைதான் சிறப்பா?
 


புதிய உலகு செய்வாம்

புதியதோர் உலகம் செய்வோம் -- கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். (புதிய)

பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
 
புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம். (புதிய)

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
'இது எனதெ'ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
 (புதிய)

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
'ஒருபொருள்
 தனி,எனும் மனிதரைச் சிரிப்போம்! (புதிய) 

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய)



நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து

   நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்

கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்

   கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் 

சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!

   சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!

காலைவந்த செம்பரிதி கடலில்முழ்கிக்

   கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!



வாளினை எடடா!

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
 
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!
 

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர;கெடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
 
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
 
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
 
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
 
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!



வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!

விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!

சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்

தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்

காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
 

கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!

கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்

கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!



பகை நடுக்கம் 

தமிழர் என்று சொல்வோம் - பகைவர் 
தமை நடுங்க நடுங்க வைப்போம்
 
இமய வெற்பின் முடியிற் - கொடியை
ஏற வைத்த நாங்கள் தமிழர் என்று...

நமத டாஇந் நாடு - என்றும்
 
நாமிந் நாட்டின் வேந்தர்
சமம்இந் நாட்டு மக்கள் - என்றே
 
தாக்கடா வெற்றி முரசை! தமிழர் என்று...

எந்த நாளும் தமிழர் - தம் கை
 
ஏந்தி வாழ்ந்த தில்லை
இந்த நாளில் நம் ஆணை - செல்ல
ஏற்றடா - தமிழர் கொடியை. தமிழர் என்று...
 

வையம் கண்ட துண்டு - நாட்டு
 
மறவர் வாழ்வு தன்னைப
பெய்யும் முகிலின் இடிபோல் - அடடே
பேரிகை முழக்கு தமிழர் என்று...



கூவாய் கருங்குயிலே 

எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே 
பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றேநீ
செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய
கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே.




சிறுத்தையே வெளியில் வா

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
 
சிம்புட் பறவையே சிறகை விரி, எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
 
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள் உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
 
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
 
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
 
வாழ்கதிராவிட நாடு!
வாழ்க நின்வையத்து மாப்புகழ் நன்றே!



எங்கள் உடல் பொருள் ஆவியெல்லாம் -- எங்கள்
   இன்பத் தமிழ் மொழிக்கே தருவோம்!
மங்கை ஒருத்தி தரும் சுகமும் -- எங்கள்
   மாத்தமிழ்க்கீடில்லை என்றுரைப்போம்!          (இந்) 
சிங்கமென்றே. இளங் காளைகளே -- மிகத்
   தீவிரம் கொள்ளுவீர் நாட்டினிலே!
பங்கம் விளைத்திடில் தாய்மொழிக்கே -- உடற்
   பச்சை ரத்தம் பரிமாறிடுவோம்!    
     



மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை -- நமை
   மாட்ட நினைக்கும் சிறைச்சாலை! 
ஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே -- உயிர்
   இவ்வுடலை விட்டு நீங்கும் வரை!    



இந்தி எதிர்ப்புப் பாட்டு

இந்தி புகுந்தது நாட்டிலே -- இன்னும்
என்னசெய்கின்றீர் வீட்டிலே?
மைந்தர்அன்னைதந்தை யாவரும் -- ஒடி
வாருங்கள் போர்எல்லைக் கோட்டிலே

இன்பத்திராவிட நாட்டினை -- உண்டு
ஏப்ப மிடும்ஏற்பாட்டினைப்
பன்முறை யும்செய்து பார்த்தனர் -- இன்னும்
பார்ப்பாரானால் பார்க்கட்டுமே.

செத்த வடமொழி காட்டியும் -- நம்
செந்தமிழ் மேல்எய்த ஈட்டியும்
பொத்தென வீழ்ந்தது பன்முறை -- இந்திப்
பூச்சாண்டி காட்டினர் இம்முறை.

இந்தும தம்என்ற பேச்சையே -- சொல்லி
இன்பத் தமிழன்னை மூச்சையே
கொந்திடப் பார்த்தனர் பன்முறை -- இந்திக்
கொம்பூதி வந்தனர் இம்முறை.

வேதம் வடமொழி என்றனர் -- தமிழ் 
வீண்மொழி என்றுபு கன்றனர்
ஏதும்செல்லாதெனக் கண்டபின் -- இன்
றிந்தியைக் கட்டாயம் என்றனர்.

ஆட்சியெலாம்அவர் கையிலாம் -- படை
அத்தனை யும்அவர் பையிலாம்
கோட்டை பிடித்ததும் இந்தியாம் -- நம்
கோடரிக் காம்புகள் கூற்றிவை.

தீந்தமிழ் காணாத சேய்களின் -- பெருஞ்
செல்வத்தை இந்தியின் வாய்களில்
ஈந்தனர் இம்மூட நாய்களின் -- செயல்
ஏற்குமோ இப்பெரு நாட்டிலே.

நாடு நலம்பெற வேண்டுமாம் -- வட
நாட்டிந்தி தான் அதைத் தூண்டுமாம்
பீடுறு செந்தமிழ் நாட்டிலே -- சில
பேடிப் பசங்களின் கூற்றிவை.

என் உள்ளம் கவர்ந்த மகாகவி பாரதியின் கவிதைகள் சில


நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?


விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ


ஓடி விளையாடு பாப்பா! - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
குழைந்தையை வையாதே பாப்பா!
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!

வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்

வந்தே மாதரம் என்போம் - எங்கள் 
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)
 

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் 
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
 
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
 
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
 

ஈனப் பறையர்க ளேனும் அவர்
 
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
 
சீனத் தராய்விடு வாரோ? - பிற
 
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)
 

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் 
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
 
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
 
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)
 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
 
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
 
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
 
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)
 

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
 
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
 
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
 
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)
 

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
 
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
 
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
 
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)
 

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
இருந்ததும் இந்நாடே - அதன்
 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
 
முடிந்ததும் இந்நாடே - அவர்
 
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
 
சிறந்ததும் இந்நாடே - இதை
 
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
 
வாயுற வாழ்த்தேனோ? - இதை
 
வந்தே மாதரம், வந்தே மாதரம்
 
என்று வணங்கேனோ?
 

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி 
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
 
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
 
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
 

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், 
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
 
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
 
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)
சிந்து நதியின்மிசை நிலவினி லே 
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
 
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
 
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)
 

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
 
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
 
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
 
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் 
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
 
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
 
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)
 

முப்பதுகோடி முகமுடை யாள்உயிர் 
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
 
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
 
சிந்தனை ஒன்றுடையாள்.
 

தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத் 
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
 

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
 
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
 
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
 
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
 

பட்டுத் துகிலென லாமோ? - அதில்
 
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
 
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
 
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)
 
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும் 
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
 
நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
 
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)

நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த 
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
 
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
 
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
 

ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா 
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
 
களிப டைத்த மொழியினாய் வா வா வா
 
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
 
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
 
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
 
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
 
ஏறு போல் நடையினாய் வா வா வா
 
இளைய பார தத்தினாய் வா வா வா 
எதிரிலா வலத்தினாய் வா வா வா
 
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
 
உதய ஞாயி றொப்பவே வா வா வா
 
களையி ழந்த நாட்டிலே முன்போலே
 
கலைசி றக்க வந்தனை வா வா வா

பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க! 
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய (பாரத)
 
இனியொரு விதிசெய் வோம் - அதை 
எந்த நாளும் காப்போம்,
 
தனியொரு வனுக் குணவிலை யெனில்
 
ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க! (பாரத)
 
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் 
எல்லாரும் இந்திய மக்கள்,
 
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
 
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
 
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
 
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! (பாரத)
 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் 
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
 
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
 
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)
 
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் 
கண்டதோர் வையை பொருனை நதி - என
 
மேவிய யாறு பலவோடத் - திரு
 
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று 
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
 
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
 
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)
 

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
 
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
 
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
 
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)
 

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
 
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
 
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
 
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
 


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் 
இனிதாவது எங்கும் காணோம்,
 
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
 
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
 
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
 
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
 
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
 
பரவும்வகை செய்தல் வேண்டும்.
 

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
 
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
 
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
 
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
 
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
 
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
 
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
 
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
 

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
 
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
 
இறவாத புகழுடைய புதுநூல்கள்
 
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
 
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
 
சொல்வதிலோர் மகிமை இல்லை
 
திறமான புலமையெனில் வெளி நாட்டோ ர்
 
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
 


உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
 
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
 
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
 
கவிப்பெருக்கும் மேவு மாயின்
 

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
 
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
 
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
 
இங்கமரர் சிறப்புக் கண்டார். 

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! 
வாழிய பாரத மணித்திரு நாடு!
 
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
 
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக
 

தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் 
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? 
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
 

மாதர் தம்மை இழிவு செய்யும் 
மடமை யைக்கொ ளுத்துவோம்
 

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று (ஆடு)
 

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
 
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
 
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
 
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)
 

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
 
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
 
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
 
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு)
 

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
 
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
 
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
 
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு)
 

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
 
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
 
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் - வெறும்
 
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோ ம். (ஆடு)
 

நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது 
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்
 
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி
 
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)
 


பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
 
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
 
வானக முட்டும் இமயமால் வரையும்
 
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
 
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்
 

தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
 
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
 
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
 
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
 
மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப
தில்லையே.

காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 1


வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!

ஆடை குலைவுற்று நிற்கிறாள்; -- அவள்
ஆவென் றழுது துடிக்கிறாள். -- வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன் -- அவள்
மைக்குழல் பற்றி யிழுக்கிறான். -- இந்தப
பீடையை நோக்கினன் வீமனும், -- கரை
மீறி எழுந்தது வெஞ்சினம்; -- துயர்
கூடித் தருமனை நோக்கியே, -- அவன்
கூறிய வார்த்தைகள் கேட்டீரா?
சூதர் மனைகளிலே -- அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே -- அங்கோர்
தொண்டச்சி போவதில்லை.
நாட்டையெல்லாந் தொலைத்தாய்; -- அண்ணே,
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமையடிமை -- செய்தாய்,
மேலும் பொறுத்திருந்தோம்.    

‘துருபதன் மகளைத் -- திட்டத்
துய்ந னுடற்பிறப்பை, --
இருபகடை யென்றாய், -- ஐயோ!
இவர்க் கடிமையென்றாய்!    

‘இதுபொறுப்ப தில்லை, -- தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் -- அண்ணன்
கையை எரித்திடுவோம்.’   

‘“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம்மறு படிவெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
. தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்’ என்றான்.

தேவி திரௌபதி சொல்வாள் -- ‘ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவிதுச் சாதனன் செந்நீர், -- அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து -- குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்; -- இது
செய்யுமுன்னேமுடியே’னென் றுரைத்தாள்.

சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா! 
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில் 
ஏற்றம் புரிய வந்தாய்! ... 1

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா 
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே 
ஆடி வருந் தேனே! . ... 2

ஓடி வருகையிலே - கண்ணம்மா! 
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய் 
ஆவி தழுவு தடீ! ... 3

உச்சி தனை முகந்தால் - கருவம் 
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால் 
மேனி சிலிர்க்குதடீ! ... 4

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் 
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா! 
உன்மத்த மாகுதடீ! ... 5


சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது 
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு 
நெஞ்சம் பதைக்கு தடீ! ... 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில் 
உதிரம் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா! 
என்னுயிர் நின்ன தன்றோ? ... 7

சொல்லு மழலையிலே - கண்ணம்மா! 
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது 
மூர்க்கந் தவிர்த்திடு வாய். ... 8

இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல் 
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர் 
ஆகுமோர் தெய்வ முண்டோ ? ... 9

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் 
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் 
செல்வம் பிறிது முண்டோ ? ... 10 

சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா! 
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா! 
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை 
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும் 
நக்ஷத் திரங்க ளடீ! ... 1

சோலை மல ரொளியோ - உனது 
சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே - உனது 
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது 
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ, - கண்ணம்மா! 
மருவக் காதல் கொண்டேன். ... 2

சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா! 
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா! 
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை 
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ? - இதுபார், 
கன்னத்து முத்த மொன்று! ... 3 

வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! 
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே 
பாவை தெரியு தடீ! ...

காதல், காதல் காதல்; 
காதல் போயிற் காதல் போயிற்
 
சாதல், சாதல், சாதல்.
 

காலா, உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன்
காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்!

பாலுங் கசந்தடீ தடீ! - சகியே! 
படுக்கை நொந்த தடீ! 

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவமெய்திக்
கொடுங்கூற்றுக் கிரைஎனப் பின்மாயும்
பலவேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ ?

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.