Thursday, August 31, 2023

வீடுவரை உறவு வீதிவரை மனைவி

 பட்டினத்தார் வாழ்க்கையின் நிலையாமையைப்

பற்றி அழகாகப்  பாடி அனைவர் கண்களிலும்

கண்ணீர் வர வைத்துவிடுவார்.

 

"அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக

மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு

கைத்தலம் மேல்வைத் தழுமைந் தரும் சுடு காடுமட்டே

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே"

 

என்பது பட்டினத்தார் பாடல்.

 

வாழ்க்கை கொடுத்தவள் உறவு வீட்டோடு

முடிந்துவிடும்.

அன்பொழுக விம்மி அழும் உறவுகள்

வீதிவரை மட்டுமே வரும்.

பெற்ற மைந்தர் சுடுகாடு வரை வருவர்.

நம் பாவ புண்ணியங்கள் கடைசி வரை

கூட வரும் என்பார் பட்டினத்தடிகள்.

 

இந்தப் பாடலின் தாக்கம்  பாத காணிக்கை

என்ற படத்தில் ,

 

வீடுவரை உறவு

வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை

கடைசிவரை யாரோ...

  

ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா ?

 

சென்றவனைக் கேட்டால்

வந்துவிடு என்பான்

வந்தவனைக் கேட்டால்

சென்றுவிடு என்பான்

அத்திக்காய் காய் காய்

 காளமேகப் புலவர் காய் என்ற சொல்லை

வைத்து ஒரு பாடலில் விளையாட்டுக்

காட்டி இருப்பார்.

 "கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்_ உருக்கமுள்ள

அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள்

உப்புக்காண் சீச்சீ யுமி "

 இது காளமேகப் புலவர் பாடல்.

 நாலு காய்கள் எடுத்துச் சமைத்த

 காளமேகத்திடமிருந்து

 காய் என்ற சொல்லை  மட்டும் எடுத்து 

இருபத்து ஐந்துமுறை காய் விருந்து

 படைத்து அசத்தினார் கண்ணதாசன்.

 

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

 அந்தத் திசையில் வெம்மையுற வீசு ஆலமரத்துக் காயைப் போன்று தூரத்தே இருந்து சிறிதாகத் தோன்றும் வெண்ணிலவே ! இந்த்த் திசையில் வெம்மையுற வீசாதே... ஏனென்றால் என் உயிராக உன்னைக் கருதும் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

 கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

 கன்னி எனக்காக... என்னுடைய ஆசைக்காக... காதல் கொண்டிருக்கும் பாவையாகிய எனக்காக.... அங்கே வெம்மையுற வீசு... அவர்மீது வெம்மையுற வீசு... மங்கையாகிய என்னுடைய அரசனை (கோவை) வெம்மையுற வை...!

 மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

 பெண் அவ்வாறு கூறியதும் ஆண் சமாதானம் கூறுகிறான் :- மாதின் உள்ளம் என்னைக் காய் எனக் கட்டளையிடுவதன் மூலம் காய்போல் ஆனாலும் (மாது+உளம்+காய்) அவளை விரும்பியிருக்கும் என்னுள்ளம் காய் போலாகுமா என்ன ? அதனால் என்மீது வெம்மையுற வீசாதே வெண்ணிலா !

 இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

 இரவுக்காகவும் அவ்வாறு இரவு வந்தால் ஏற்படும் உறவுக்காகவும் ஏங்குகின்ற இந்த ஏழைக்காக நீ வெம்மையுற வீசு. எந்நேரமும் வெம்மையுற வீசு. இதோ நேரில் என்னை அணைக்காமல் நிற்கிறாளே இவளைக் கடிந்துகொள் !

 உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

 ஆண் அவ்வாறு சினந்து பேசுவதால் பெண் அவனுக்குத் தன் உள்ளக் கிடக்கையைக் குறிப்பால் உணர்த்துகிறாள் :- அட புரியாதவரே... நான் உருவத்தால் சின்னஞ்சிறியவளாய் இன்னும் பழுக்காதவளாய்த் தோன்றுகின்றேனேயன்றி பருவத்தால் எப்படிப்பட்டவள் தெரியுமா... காயைப் போன்றவள் இல்லை அன்பரே... பருவத்தால் நான் பழுத்துக் கனிந்தவள் அல்லவா ! அதனால், வெண்ணிலவே அவர் சொல்கிறார் என்று என்னைக் கடிந்து பேசாதே !

 ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

ஏலக்காய் வாசனை எப்படித் தன் காலமுள்ளவரை மணம் பரப்பி

நிற்குமோ அப்படி எங்கள் உள்ளத்தில் காதல் என்னும் நறுமணம் காலந்தோறும் மணந்து நிற்கட்டும் என்று நிலவே நீ வீசு...! ஜாதிக்காய்ப் பெட்டகத்தைப் போல இந்தத் தனிமை இன்பத்தால் நிறைந்து கனியும்படி காய்வாயாக !

 சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

 என்ன வெண்ணிலவே ! என் காதலி சொன்னதை விளங்கிக்கொண்டாயா ? இருவருக்கும் இடையே தூதாகவும் விளங்கி நிற்கும் வெண்ணிலவே !

  உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

 உள்ளம் எல்லாம் இளக மாட்டாயோ ? உன்னிடமுள்ள ஒவ்வொரு தேன் துளியையும் சுரக்கமாட்டாயோ ? வெள்ளரிக்காய் பிளந்ததுபோல பற்கள் அனைத்தும் தெரிய சிரிக்க மாட்டாயோ ?

 கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலவே

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

 கோதையென்னைக் காயாமல் என் மன்னவனைக் காய்வாய் வெண்ணிலவே ! சரி சரி ! எங்கள் இருவரையும் காயவேண்டாம் ! எங்கள் பாவிளையாடல் முடிந்துவிட்டது. இனி பருவவிளையாடல் ஆடப்போகிறோம். அதனால் இனி நீ தொலைவே போய் தனிமையில் வீசிக்கொண்டிரு வெண்ணிலவே !

இந்தக் காய்கள்  போதுமா...இன்னும் கொஞ்சம்

வேண்டுமா...என்று போதும் போதும்

என்று சொல்லும் அளவிற்கு காய்களைக்

கொண்டு வந்து குவித்துவிட்டார் கண்ணதாசன்.

Wednesday, August 30, 2023

ஒரு பாடல் இரு பொருள்

காளமேகப் புலவர் பாடுகையிலேயே இரண்டு விதமாகப் பொருள் வரும்படியாகப் பாடுவதில் வல்லவராக இருந்தார். அதற்கு ஒரு உதாரணம்.

சோழ நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கவி காளமேகம் ஒரு நாள் பல இடங்கள் சுற்றி களைத்துப் போய் இரவு நேரத்தில் நாகப்பட்டினம் வந்து சேர்ந்தார்.

மிகுந்த பசி வேறு அவரை வாட்டியது. “எங்கு உணவு கிடைக்கும்?” என்று

ஊராரிடம் விசாரித்த போது “காத்தான் சத்திரம் என்ற சத்திரத்திற்குச்

சென்றால் உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள்.

காளமேகப் புலவர் பசித்த வயிற்றுடன் வெகுநேரம் காத்திருந்தாராம், ஆனால் அங்கேமாலை வரை சோறு சமைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.

பசி முற்றியதால் புலவர் அங்கேயே சுருண்டு படுத்து விட்டார். பின்

அடுத்த நாள் காலையில் சோறுண்ண அழைக்கப்பட்ட போது

பின்வருமாறு பாடினாராம்.


"கத்து கடல் சூழ் நாகைக் காத்தன் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போதினிலே அரிசி வரும் அதைக் குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்."


"ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தன் என்பவனின்

சத்திரத்தில் மாலை மயங்கும் வேளையில் அரிசி மூட்டைகள்

வரும். அதை குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து

அடுப்பில் ஏற்ற இரவு வந்து விடும். சோறாக்கி இலையில் இடும்போது

பொழுது விடிந்து விடும்"


என்று பொருள் தொனிக்க பாடியதைக்

கேட்ட காத்தன் பதறி வந்து பணிந்தான்.

அவர் காளமேகப் புலவர் என்று தெரிந்து மன்னிப்பு வேண்டினான்.

இனி அவ்வண்ணம் நிகழாது என்று உறுதி கொடுத்தான். பாடலை

மாற்றித் தருமாறு கேட்டுக் கொண்டான்.

ஆனால் புலவரோ பாடலை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அதன் உட்பொருளைப் புரிந்து கொண்டாலே போதும் என்றும் சொன்னார்.

அதாவது "ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தன் என்பவனின்

சத்திரத்தில் உலகில் எங்குமே அரிசி இல்லாமல் அஸ்தமிக்கும் வேளையிலும் அரிசி மூட்டைகள் வரும். அதை குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து அடுப்பில் ஏற்றுவதைக் கண்டதுமே ஊராரின் பசி அடங்கி விடும். சோறாக்கி ஒரு கரண்டி அன்னம் இலையில் போட்டதும் விடிவெள்ளியாகிய சுக்கிரன் அதன் வெண்மை நிறம் கண்டு நாணி எழுந்து விடும்" என்றாராம்.

கவியின் திறமைதான் என்னே ! தமிழின் பெருமைதான் என்னே !

அக்காலத்தில் புலவர்கள் திருமண வீட்டுக்குச் சொன்றால் மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாடுவது வழக்கம். ஏதோ ஒரு தெய்வத்தின் பெயரைக் குறிப்பிட்டு அத்தெய்வம் மணமக்களைக் காக்கட்டும் என்று பாடுவார்கள்.

காளமேகமும் அப்படி ஒரு திருமணத்திற்குச் சென்ற போது மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாட வேண்டி வந்தது. அதில் தர்மசங்கடம் என்னவென்றால் அங்கு வைணவர்களும் இருந்தனர், சைவர்களும் இருந்தனர். அக்காலத்தில் அவர்களுக்கிடையே கடுமையான சண்டை இருந்தது. திருமாலை வைத்துப் பாடினால் சைவர்களுக்கு வருத்தம். சிவனைப் பாடினாலோ வைணவர்களுக்கு வருத்தம்.

காளமேகம் சற்று யோசித்து விட்டு சைவ மற்றும் வைணவ அடியார்கள் இருபாலாரையும் மகிழ்விக்கும் விதத்தில் ஒரு பாடல் பாடினார்.

சாரங்க பாணிய ரஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்

ஓரங்கங் கொய்த உயர்வாளர்-பாரெங்கும்

ஏத்திடுமை யாக ரினிதா யிருவரும்மைக்

காத்திடுவ ரெப்போதும் காண்.


சிவனைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.

சாரங்கபாணியர் - மானேந்திய கையினர்

அஞ்சு அக்கரத்தர் - பஞ்சாட்சர சொரூபமானவர்

முன் கஞ்சனை ஓரங்கம் கொய்த உகிர்வாள - முன் காலத்தில் தாமரை வாசனாகிய பிரம்மனை ஒரு தலையினைக் கிள்ளிய நகத்தினை உடையவர்.

பாரெங்கும் ஏத்திடும் உமை ஆகர் - உலகெல்லாம் போற்றுகின்ற உமை அம்மையைத் திருமேனியில் பாதியாகக் கொண்டவர்.

அந்த ஈசன் உம்மை எப்போதும் காத்திடுவாராக!


திருமாலைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.

சாரங்கபாணியர் - சாரங்கமாகிய வில்லைக் கைக் கொண்டவர்

அஞ் சக்கரத்தார் - அழகிய சக்கரத்தை உடையவர்

முன் கஞ்சனை ஓர் அங்கம் கொய்த உகிர்வாளர் - முன்னாளில்

மாமன் கம்சன் உடலைக் கிழித்த நகத்தினைக் கிழித்த நகத்தினை உடையவர்.

பாரெங்கும் ஏத்திடும் மையாகர் - உலகமெங்கும் போற்றிடும் கரிய மேனி உடையவர்.

அந்த திருமால் உம்மை எப்போதும் காத்திடுவாராக!


அவர் பாடலில் இப்படி தங்களுக்கு ஏற்றது போல பொருள் கொண்டு

வைணவ அடியார்களும், சைவ அடியார்களும் மகிழ்ந்தனர்.

இப்படி தமிழைத் தனக்கு வேண்டியது போல் வளைத்து அழகான பாடல்களைப் பாடிய காளமேகம் அக்காலத்து மக்களால் ‘கவிராஜ காளமேகம்’ என்று அழைக்கப்பட்டார். இரட்டுற மொழிதல் என்றழைக்கப்பட்ட இது போன்ற இருவேறு கருத்துக்களைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பாடுவது சுலபமல்ல.

அதிலும் இரு வேறு கருத்துகளும் ஒன்றிற்கொன்று எதிர்மறையாக வேறு இருக்க முடிவது கவியின் திறமைக்கு சிகரமே அல்லவா? ஆனால் பின் தொடர்ந்த காலத்தில் இது போன்ற பாடல்கள் குறைந்து தற்போது இல்லாமலே போய் விட்டன என்பது வருத்தத்திற்கு உரிய அம்சம். இன்றைய தமிழறிஞர்கள் இது போன்ற பாடல்களை வளர்க்க ஆவன செய்வார்களா?

Monday, September 7, 2020

Monday, December 2, 2019

என்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் சில


1. இந்திய நாட்டில் சிறுபான்மையினர், தலித்துகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்.

2. மதவெறி, ஜாதி மற்றும் இன, மொழி வெறி வெறுப்பு அரசியல் வேரறுக்கப்பட்டு இந்தியாவின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படவேண்டும்.

3. ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு காந்திய வழியில் இந்திய ஜனநாயகம் மேம்படுத்தப்படவேண்டும். 

4. பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு உள்நாட்டு உற்பத்தித்திறன் உயர்த்தப்படவேண்டும்.

5. ஏழைகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு சமூகநீதி  பாதுகாக்கப்படவேண்டும். 

Thursday, October 10, 2019

தினமும் சொல்ல வேண்டிய இறை வழிபாட்டுப் பாடல்கள்

தினமும் நாம் சொல்ல வேண்டிய மற்றும் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டிய முக்கியமான இறை மந்திரங்கள் மற்றும் எனக்குப் பிடித்த வழிபாட்டுப் பாடல்களை ஒன்றாகத் தொகுத்துள்ளேன்.  இதைப் படித்து, மனனம் செய்து, பாடி இறை அருள் பெறுக

அம்மன் பாடல்கள் 

அபிராமி அந்தாதி

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும்
கர்ண குண்டலமும் மதிமுகமண்டலம் நுதற்
கஸ்தூரிப் பொட்டும் இட்டுக்
கூரணிந் திடு விழியும் அமுதமொழியும் சிறிய
கொவ்வையின் கனி அதரமும்
குமிழனைய நாசியும் குந்த நிகர் தந்தமும்
கோடு சோடான களமும்
வாரணிந் திருமாந்த வனமுலையும் மேகலையும்
மணிநூ புரப்பாதமும்
வந்தெனது முன்னின்று மந்தகா சமுமாக
வல்வினையை மாற்றுவாயே !
ஆரமணி வானில் உரை தாரகைகள் போல நிறை
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி ! அபிராமியே

தனம்தரும், கல்விதரும், ஒருநாளும் தளர்வறியா மனம்தரும், தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம்தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே.

பூத்தவளே புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே! மாத்தவளே உன்னைஅன்றி மற்றோர்தெய்வம் வந்திப்பதே

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே. பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே

நாயகி நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாய்கி, மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று ஆயகியாதிய உடையாள் சரணம் அரண் நமக்கே


பயிரவி, பஞ்சமி, பாசாங் குசைபஞ்ச பாணி, வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர்சண்டி, காளி, ஒளிரும்கலா வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, அங்குச பாசங்குசமும் கருப்பும் அங்கையிற் சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம் பேபழுத்த
படியே மறையின் பரிமள மேபனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப்பிற வாமல் வந்து ஆண்டுகொள்ளே

உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே


சிவபெருமான் பாடல்கள்

திருவாசகம்

சிவபுராணம்

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,
பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
`உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்
"ஐயா" என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றது
ஈச னெந்தை யிணையடி நிழலே.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை  நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசந்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை யல்லாள் இனியாரை நினைக்கேனே

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப்பெறுந் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரே மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும்
கண்கள்நின்றிமைப் பதுமறந்தாலும்
நற்த வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே

ஓம்நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நமஓம்
பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்


விநாயகர் பாடல்கள்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக்கால்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா.

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம். 


முருகன் பாடல்கள்

அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும் நெஞ்சில்
ஒருக்கால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்

ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியாரெல்லாம்

சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழனிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்

வருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 

சண்முகக் கடவுள் போற்றி ! சரவணத்(து) உதித்தோய் போற்றி!
கண்மணி முருகா போற்றி ! கார்த்திகை பாலா போற்றி!
தண்மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி !
விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி ! போற்றி !!


திருமால் பாடல்கள்

பச்சைமாமலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம்
கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே.


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் ஜோதி வலத்துறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே!

திருப்பாவை 

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
     பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்


ஆஞ்சநேயர் பாடல்கள்

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான.

ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹ சாரிணம்
துஷ்ட க்ரஹ வினாஸாய
ஹனுமந்த முபாஸ் மஹே


திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே


குரு பகவானுக்கு உகந்த மந்திரங்கள்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

காயத்திரி மந்திரம்

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|


மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஷ்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

Wednesday, April 3, 2019

‘வயிறு’ பற்றி ஒளவையும் ரமணரும் கூறியது

ஒருநாள் இரவு ஆசிரமத்தில் சுவையான சாப்பாடு சாப்பிட்டு விட்டு பக்தர்கள் சிலருடன் ரமண மகரிஷி அமர்ந்திருந்தார். வழக்கத்தை விட தாமதமாக இரவு உணவை உண்டதால் எல்லோரும் களைப்படைந்தனர்.
அப்போது அவர்களுடன் இருந்த சோமசுந்தர சுவாமி என்பவர் நீண்ட அறையில் படுத்துக் கொண்டு தன் வயிற்றைத் தடவியபடி பாடல் ஒன்றைப் பாடினார்.
''ஒருநாள் உணவை
ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளைக்கு
ஏலென்றால் ஏலாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது''
இந்தப் பாடல், ஒரு காலத்தில் வயிற்றை நோக்கி ஒளவையார் என்னும் பெண் புலவரால் பாடப்பட்டதாகும்.
இதன் பொருள்:
''ஏ, வயிறே! ஒரு நாள் உணவை உண்ணாமல் இரு என்றால் நீ கேட்பதில்லை. அல்லது இரண்டு நாளைக்குச் சேர்த்துச் சாப்பிடு என்றாலும் அவ்வாறு செய்வதில்லை. நீ மிகவும் துன்பம் தருகிறாய். உன்னோடு வாழ்வது என்பது அரிது.''
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமண மகரிஷி, வயிறு மனிதனை நோக்கிப் பாடுவதுபோல, அதே பாடலை மாற்றிப் பாடினார்.
''ஒரு நாழிகை வயிறு எற்கு
ஓய்வு ஈயாய் நாளும்
ஒரு நாழிகை
உண்பது ஓயாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் உயிரே
உன்னோடு வாழ்தல் அரிது''
பாடலின் பொருள் இதுதான்:
''ஓ, உயிருக்கு உறைவிடமான மனிதனே! வயிறாகிய எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை. ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. என் துன்பம் உனக்குப் புரிவ தில்லை. எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே! உன்னோடு வாழ்தல் அரிது.''
இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை பற்றிக் கூறும்போது, ''விளையாட்டுக்காக எழுதிப் பாடினேன்'' என்றார் மகரிஷி. சிந்தித்துப் பார்த்தால் இது விளையாட்டாகப் பாடிய பாடலாகவா தோன்றுகிறது?
ரமணரது இந்த பாடல், வயிற்றை நோக்கிப் பாடிய ஒளவையாருக்கு, வயிறே பதில் சொல்வது போல் அல்லவா தெரிகிறது!