Thursday, August 31, 2023

வீடுவரை உறவு வீதிவரை மனைவி

 பட்டினத்தார் வாழ்க்கையின் நிலையாமையைப்

பற்றி அழகாகப்  பாடி அனைவர் கண்களிலும்

கண்ணீர் வர வைத்துவிடுவார்.

 

"அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக

மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு

கைத்தலம் மேல்வைத் தழுமைந் தரும் சுடு காடுமட்டே

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே"

 

என்பது பட்டினத்தார் பாடல்.

 

வாழ்க்கை கொடுத்தவள் உறவு வீட்டோடு

முடிந்துவிடும்.

அன்பொழுக விம்மி அழும் உறவுகள்

வீதிவரை மட்டுமே வரும்.

பெற்ற மைந்தர் சுடுகாடு வரை வருவர்.

நம் பாவ புண்ணியங்கள் கடைசி வரை

கூட வரும் என்பார் பட்டினத்தடிகள்.

 

இந்தப் பாடலின் தாக்கம்  பாத காணிக்கை

என்ற படத்தில் ,

 

வீடுவரை உறவு

வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை

கடைசிவரை யாரோ...

  

ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா ?

 

சென்றவனைக் கேட்டால்

வந்துவிடு என்பான்

வந்தவனைக் கேட்டால்

சென்றுவிடு என்பான்

அத்திக்காய் காய் காய்

 காளமேகப் புலவர் காய் என்ற சொல்லை

வைத்து ஒரு பாடலில் விளையாட்டுக்

காட்டி இருப்பார்.

 "கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்_ உருக்கமுள்ள

அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள்

உப்புக்காண் சீச்சீ யுமி "

 இது காளமேகப் புலவர் பாடல்.

 நாலு காய்கள் எடுத்துச் சமைத்த

 காளமேகத்திடமிருந்து

 காய் என்ற சொல்லை  மட்டும் எடுத்து 

இருபத்து ஐந்துமுறை காய் விருந்து

 படைத்து அசத்தினார் கண்ணதாசன்.

 

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

 அந்தத் திசையில் வெம்மையுற வீசு ஆலமரத்துக் காயைப் போன்று தூரத்தே இருந்து சிறிதாகத் தோன்றும் வெண்ணிலவே ! இந்த்த் திசையில் வெம்மையுற வீசாதே... ஏனென்றால் என் உயிராக உன்னைக் கருதும் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

 கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

 கன்னி எனக்காக... என்னுடைய ஆசைக்காக... காதல் கொண்டிருக்கும் பாவையாகிய எனக்காக.... அங்கே வெம்மையுற வீசு... அவர்மீது வெம்மையுற வீசு... மங்கையாகிய என்னுடைய அரசனை (கோவை) வெம்மையுற வை...!

 மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

 பெண் அவ்வாறு கூறியதும் ஆண் சமாதானம் கூறுகிறான் :- மாதின் உள்ளம் என்னைக் காய் எனக் கட்டளையிடுவதன் மூலம் காய்போல் ஆனாலும் (மாது+உளம்+காய்) அவளை விரும்பியிருக்கும் என்னுள்ளம் காய் போலாகுமா என்ன ? அதனால் என்மீது வெம்மையுற வீசாதே வெண்ணிலா !

 இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

 இரவுக்காகவும் அவ்வாறு இரவு வந்தால் ஏற்படும் உறவுக்காகவும் ஏங்குகின்ற இந்த ஏழைக்காக நீ வெம்மையுற வீசு. எந்நேரமும் வெம்மையுற வீசு. இதோ நேரில் என்னை அணைக்காமல் நிற்கிறாளே இவளைக் கடிந்துகொள் !

 உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

 ஆண் அவ்வாறு சினந்து பேசுவதால் பெண் அவனுக்குத் தன் உள்ளக் கிடக்கையைக் குறிப்பால் உணர்த்துகிறாள் :- அட புரியாதவரே... நான் உருவத்தால் சின்னஞ்சிறியவளாய் இன்னும் பழுக்காதவளாய்த் தோன்றுகின்றேனேயன்றி பருவத்தால் எப்படிப்பட்டவள் தெரியுமா... காயைப் போன்றவள் இல்லை அன்பரே... பருவத்தால் நான் பழுத்துக் கனிந்தவள் அல்லவா ! அதனால், வெண்ணிலவே அவர் சொல்கிறார் என்று என்னைக் கடிந்து பேசாதே !

 ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

ஏலக்காய் வாசனை எப்படித் தன் காலமுள்ளவரை மணம் பரப்பி

நிற்குமோ அப்படி எங்கள் உள்ளத்தில் காதல் என்னும் நறுமணம் காலந்தோறும் மணந்து நிற்கட்டும் என்று நிலவே நீ வீசு...! ஜாதிக்காய்ப் பெட்டகத்தைப் போல இந்தத் தனிமை இன்பத்தால் நிறைந்து கனியும்படி காய்வாயாக !

 சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

 என்ன வெண்ணிலவே ! என் காதலி சொன்னதை விளங்கிக்கொண்டாயா ? இருவருக்கும் இடையே தூதாகவும் விளங்கி நிற்கும் வெண்ணிலவே !

  உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

 உள்ளம் எல்லாம் இளக மாட்டாயோ ? உன்னிடமுள்ள ஒவ்வொரு தேன் துளியையும் சுரக்கமாட்டாயோ ? வெள்ளரிக்காய் பிளந்ததுபோல பற்கள் அனைத்தும் தெரிய சிரிக்க மாட்டாயோ ?

 கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலவே

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

 கோதையென்னைக் காயாமல் என் மன்னவனைக் காய்வாய் வெண்ணிலவே ! சரி சரி ! எங்கள் இருவரையும் காயவேண்டாம் ! எங்கள் பாவிளையாடல் முடிந்துவிட்டது. இனி பருவவிளையாடல் ஆடப்போகிறோம். அதனால் இனி நீ தொலைவே போய் தனிமையில் வீசிக்கொண்டிரு வெண்ணிலவே !

இந்தக் காய்கள்  போதுமா...இன்னும் கொஞ்சம்

வேண்டுமா...என்று போதும் போதும்

என்று சொல்லும் அளவிற்கு காய்களைக்

கொண்டு வந்து குவித்துவிட்டார் கண்ணதாசன்.

Wednesday, August 30, 2023

ஒரு பாடல் இரு பொருள்

காளமேகப் புலவர் பாடுகையிலேயே இரண்டு விதமாகப் பொருள் வரும்படியாகப் பாடுவதில் வல்லவராக இருந்தார். அதற்கு ஒரு உதாரணம்.

சோழ நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கவி காளமேகம் ஒரு நாள் பல இடங்கள் சுற்றி களைத்துப் போய் இரவு நேரத்தில் நாகப்பட்டினம் வந்து சேர்ந்தார்.

மிகுந்த பசி வேறு அவரை வாட்டியது. “எங்கு உணவு கிடைக்கும்?” என்று

ஊராரிடம் விசாரித்த போது “காத்தான் சத்திரம் என்ற சத்திரத்திற்குச்

சென்றால் உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள்.

காளமேகப் புலவர் பசித்த வயிற்றுடன் வெகுநேரம் காத்திருந்தாராம், ஆனால் அங்கேமாலை வரை சோறு சமைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.

பசி முற்றியதால் புலவர் அங்கேயே சுருண்டு படுத்து விட்டார். பின்

அடுத்த நாள் காலையில் சோறுண்ண அழைக்கப்பட்ட போது

பின்வருமாறு பாடினாராம்.


"கத்து கடல் சூழ் நாகைக் காத்தன் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போதினிலே அரிசி வரும் அதைக் குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்."


"ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தன் என்பவனின்

சத்திரத்தில் மாலை மயங்கும் வேளையில் அரிசி மூட்டைகள்

வரும். அதை குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து

அடுப்பில் ஏற்ற இரவு வந்து விடும். சோறாக்கி இலையில் இடும்போது

பொழுது விடிந்து விடும்"


என்று பொருள் தொனிக்க பாடியதைக்

கேட்ட காத்தன் பதறி வந்து பணிந்தான்.

அவர் காளமேகப் புலவர் என்று தெரிந்து மன்னிப்பு வேண்டினான்.

இனி அவ்வண்ணம் நிகழாது என்று உறுதி கொடுத்தான். பாடலை

மாற்றித் தருமாறு கேட்டுக் கொண்டான்.

ஆனால் புலவரோ பாடலை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அதன் உட்பொருளைப் புரிந்து கொண்டாலே போதும் என்றும் சொன்னார்.

அதாவது "ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தன் என்பவனின்

சத்திரத்தில் உலகில் எங்குமே அரிசி இல்லாமல் அஸ்தமிக்கும் வேளையிலும் அரிசி மூட்டைகள் வரும். அதை குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து அடுப்பில் ஏற்றுவதைக் கண்டதுமே ஊராரின் பசி அடங்கி விடும். சோறாக்கி ஒரு கரண்டி அன்னம் இலையில் போட்டதும் விடிவெள்ளியாகிய சுக்கிரன் அதன் வெண்மை நிறம் கண்டு நாணி எழுந்து விடும்" என்றாராம்.

கவியின் திறமைதான் என்னே ! தமிழின் பெருமைதான் என்னே !

அக்காலத்தில் புலவர்கள் திருமண வீட்டுக்குச் சொன்றால் மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாடுவது வழக்கம். ஏதோ ஒரு தெய்வத்தின் பெயரைக் குறிப்பிட்டு அத்தெய்வம் மணமக்களைக் காக்கட்டும் என்று பாடுவார்கள்.

காளமேகமும் அப்படி ஒரு திருமணத்திற்குச் சென்ற போது மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாட வேண்டி வந்தது. அதில் தர்மசங்கடம் என்னவென்றால் அங்கு வைணவர்களும் இருந்தனர், சைவர்களும் இருந்தனர். அக்காலத்தில் அவர்களுக்கிடையே கடுமையான சண்டை இருந்தது. திருமாலை வைத்துப் பாடினால் சைவர்களுக்கு வருத்தம். சிவனைப் பாடினாலோ வைணவர்களுக்கு வருத்தம்.

காளமேகம் சற்று யோசித்து விட்டு சைவ மற்றும் வைணவ அடியார்கள் இருபாலாரையும் மகிழ்விக்கும் விதத்தில் ஒரு பாடல் பாடினார்.

சாரங்க பாணிய ரஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்

ஓரங்கங் கொய்த உயர்வாளர்-பாரெங்கும்

ஏத்திடுமை யாக ரினிதா யிருவரும்மைக்

காத்திடுவ ரெப்போதும் காண்.


சிவனைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.

சாரங்கபாணியர் - மானேந்திய கையினர்

அஞ்சு அக்கரத்தர் - பஞ்சாட்சர சொரூபமானவர்

முன் கஞ்சனை ஓரங்கம் கொய்த உகிர்வாள - முன் காலத்தில் தாமரை வாசனாகிய பிரம்மனை ஒரு தலையினைக் கிள்ளிய நகத்தினை உடையவர்.

பாரெங்கும் ஏத்திடும் உமை ஆகர் - உலகெல்லாம் போற்றுகின்ற உமை அம்மையைத் திருமேனியில் பாதியாகக் கொண்டவர்.

அந்த ஈசன் உம்மை எப்போதும் காத்திடுவாராக!


திருமாலைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.

சாரங்கபாணியர் - சாரங்கமாகிய வில்லைக் கைக் கொண்டவர்

அஞ் சக்கரத்தார் - அழகிய சக்கரத்தை உடையவர்

முன் கஞ்சனை ஓர் அங்கம் கொய்த உகிர்வாளர் - முன்னாளில்

மாமன் கம்சன் உடலைக் கிழித்த நகத்தினைக் கிழித்த நகத்தினை உடையவர்.

பாரெங்கும் ஏத்திடும் மையாகர் - உலகமெங்கும் போற்றிடும் கரிய மேனி உடையவர்.

அந்த திருமால் உம்மை எப்போதும் காத்திடுவாராக!


அவர் பாடலில் இப்படி தங்களுக்கு ஏற்றது போல பொருள் கொண்டு

வைணவ அடியார்களும், சைவ அடியார்களும் மகிழ்ந்தனர்.

இப்படி தமிழைத் தனக்கு வேண்டியது போல் வளைத்து அழகான பாடல்களைப் பாடிய காளமேகம் அக்காலத்து மக்களால் ‘கவிராஜ காளமேகம்’ என்று அழைக்கப்பட்டார். இரட்டுற மொழிதல் என்றழைக்கப்பட்ட இது போன்ற இருவேறு கருத்துக்களைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பாடுவது சுலபமல்ல.

அதிலும் இரு வேறு கருத்துகளும் ஒன்றிற்கொன்று எதிர்மறையாக வேறு இருக்க முடிவது கவியின் திறமைக்கு சிகரமே அல்லவா? ஆனால் பின் தொடர்ந்த காலத்தில் இது போன்ற பாடல்கள் குறைந்து தற்போது இல்லாமலே போய் விட்டன என்பது வருத்தத்திற்கு உரிய அம்சம். இன்றைய தமிழறிஞர்கள் இது போன்ற பாடல்களை வளர்க்க ஆவன செய்வார்களா?