Wednesday, May 2, 2018

கடவுள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியைத் தாண்டி, உலகில் கடவுள் நம்பிக்கை உள்ள  அனைவரும் தினமும் வணங்கும் கடவுள் உண்மையிலேயே எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று நாம் யோசித்துப் பார்த்ததுண்டா? எத்தனை மதங்கள், எத்தனை வழிபாட்டு முறைகள், எத்தனை நம்பிக்கைகள், இவை அத்தனையும் கடவுள் கேட்டுக்கொண்டிருகிறாரா? ஆம் என்றால் எந்த முறை சரியானது? இந்த கேள்வி என்னுள்ளே கேட்ட பொழுது, நான் தொடர்ந்து சிந்தித்த, என்னுடைய சில தனிப்பட்ட கருத்துக்களை கூறுகிறேன்.
கடவுள் இருக்கிறாரா என்றால் ஆம் இருக்கிறார் என்று கூறுகிறேன், இல்லாவிட்டால் இந்த உயிர், உலகம், அண்டம் எவ்வாறு சீராக இயங்குகிறது? இவை அனைத்தையும் தோற்றுவித்தது யார்? அவர் தான் கடவுள், அவரை நாம் இயற்கை என்றோ, அறிவியல் என்றோ, சிவன், விஷ்ணு, பிரம்மா, ஏசு, அல்லா, புத்தர்  என்றோ,  வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோம். அனால் அவர் ஒருவரே, அவர் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவர். இந்த மதங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்தும் மனிதனால் உருவாக்கப் பட்டவை. மனிதன் ஏன் மதத்தை உருவாக்கினான் என்றால், காட்டு மிராண்டிகளாக வாழ்ந்து கொண்டு, எதற்கும் அஞ்சாமல் உடல் பலத்தால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று வாழ்ந்த மனிதனை, நமக்கு மேலே கடவுள் ஒருவன் இருக்கிறான், அவன் இதை பார்த்துக்கொண்டிருக்கிறான், நாளை நீ அவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று பயத்தை ஏற்படுத்தி ஒழுக்கத்துடனும், அன்புடனும், உண்மையாகவும் வாழ்வதற்காக உலகின் வெவேறு பகுதிகளில் வெவேறான வடிவத்தில் மனிதனால் கற்பனையாக தோற்றுவிக்கப் பட்டதே இத்தனை மதங்கள்.
அப்படியென்றால் இறப்பிற்குப் பிறகு பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறு எந்த தண்டனையும் கிடைக்காதா, சொர்க்கம், நரகம், மறுமை நாள், அனைத்தும் பொய்யா என்றால், அதன் பதில் அது ஒரு உண்மையான பொய், அதை தான் வள்ளுவர்
"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"
என்று கூறியுள்ளார், அது பொய்யாக இருந்தாலும் நன்மையை விளைவிக்கும் நோக்கத்தில் சொல்லப் பட்டதால் அது உண்மையாகவே கருதப்படும்.
பிற உயிர்களின் மேல் காட்டும் அன்பு தான் கடவுள், நாம் பேசக்கூடிய உண்மை தான் கடவுள், நாம் பிறருக்கு செய்யக்கூடிய உதவி தான் கடவுள், கடவுள் வேறு எங்கும் இல்லை நம் உள்ளே தான் இருக்கிறார், இதைத்தான் சித்தர்கள் பின்வருமாறு பாடியுள்ளனர்.
"ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே"
உன்னுள்ளே கலந்துவிட்ட கடவுளைக் காணாமல் வெளியே தேடித்தேடி, கிடைக்காமல் இறந்துபோன மனிதர்கள் எண்ணற்ற கோடி என்கிறார்.
மேலும் கீழே உள்ள பாடலைப் பாருங்கள்
"நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"
சிலையை தெய்வமாக பூக்களால் அலங்கரித்து மந்திரம் கூறி வணங்குகிறாயே அந்த சிலை உன்னுடன் பேசுமா? இறைவனை உனக்குள்ளே இருக்கையில் அதை அறியாமல் இவ்வாறு செய்கிறாயே, அது எதை போல உள்ளதென்றால் ஒரு சுட்ட மண் சட்டியில் கறி சமைக்கிறாய், அந்த சட்டி அதன் சுவையை உணர முடியுமா? என்று கேட்கிறார்.
இதற்கு முடிவு தான் என்ன? நாம் கடவுளை நம் மதத்தின் அடிப்படையில் வணங்கக் கூடாதா? அது தவறா? என்றால், இல்லை அது தவறே இல்லை, அது ஒரு வழிமுறை தான், நம் கடவுளை அந்த உருவில் கண்டு, அந்தந்த வழியில் சென்று வணங்குகிறோம், இப்போது மதுரையிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டும், நாம் திண்டுக்கல் வழியாகச் செல்லலாம், திருச்சி வழியாகச் செல்லலாம், அல்லது வேறு ஏதாவது புதிய வழிகளில் செல்லலாம் ஆனால் நாம் சென்று சேர வேண்டிய இடம் சென்னை தான், அது போல் தான் இந்த மதங்களும், ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதையைப் போன்றது, நாம் இறுதியில் இறைவனைத் தான் சென்று சேருகிறோம்.
இதை உணர்ந்தால் நமக்குள் என் மதம் தான் உயர்ந்தது, உன் மதம் தான் உயர்ந்தது என்ற மத சண்டையே வராது. அனைத்து மதங்களின் நோக்கம் ஒன்று தான் சாராம்சம் ஒன்று தான் வழிகள் தான் வேறு.
பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுங்கள்,  உண்மையே பேசுங்கள், பிறருக்கு இயன்ற அளவில்  உதவி செய்யுங்கள், கடவுள் வேறு எங்கும் இல்லை நம் உள்ளே தான் இருக்கிறார்.
உளமே கடவுள், ஊணுடம்பே ஆலயம்.   

No comments: