Tuesday, April 2, 2019

சந்தம் தமிழுக்குச் சொந்தம்


திரிகூடராசப்பக்கவிராயர் எழுதிய திருக்குற்றாலக்குறவஞ்சி நூலிலே வசந்தவல்லி என்ற பெண் பந்துவிளையாடும் காட்சியை விளக்குவதாக அமைந்துள்ள பாடல்கள் நம்மை மிகவும் பரவசப்படுத்துகின்றன. பண்டைக்காலத்திலே பந்தடித்து விளையாடுவதும் பெண்களின் விளையாட்டுக்களிலே ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதற்கு இந்தப்பாடல்கள் சான்றாக உள்ளன. பந்தை எறிவதும், அதைப்பிடிப்பதும், பந்து பறப்பதும், நிலத்தில் விழுவதுமான காட்சிகளைப் படம்பிடித்துக்காட்டுவதுபோல இந்தப்பாடல்களைப் பொருத்தமான சந்தத்தில் புலவர் எழுதியுள்ளார்.

செங்கையில் வண்டு கலின்கலின் என்று ஜெயம் ஜெயம் என்றாட - இடை 
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட - மணிப் 
பைங்கொடி மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றனளே.

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாட - குழல்
மங்கு வில்வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை திண்டாட
மங்கல மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றனளே.

சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப் - புனை
பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு பாவனை கொண்டாடநய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலேஅணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்துபந் தாடினளே."

இந்தப் பாடல் வரிசையிலே, அடுத்ததாகத் தொடர்ந்து வருவது திரைப்படம் ஒன்றிலே இடம்பெற்றதால் மிகவும் பிரபல்யமாகிவிட்ட பாடலாகும். 'காதலன்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலை எழுதியவர் இக்காலத் திரைப்படப் பாடலாசிரியர்களில் ஒருவர்தான் என்று இன்னும் பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், திரிகூடராசப்பக் கவிராயர் என்ற புலவரால் இயற்றப்பட்ட குற்றாலக் குறவஞ்சியிலே இடம்பெற்ற அந்தப்பாடலைத் திரைப்படத்திற்காக எடுத்தாண்டு இசையமைத்துப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதுதான் உண்மை.

அந்தப்பாடல்

"இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மனம்
முந்திய தோவிழி முந்திய தோகரம் முந்திய தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப் 
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரிபொற் பந்து கொண்டாடினளே."

No comments: