Monday, January 28, 2019

பாரதி சின்னப் பயல்

 

எட்டயபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்பவர் தமிழ்ப் புலவர். பாரதியை விட வயதில் மூத்தவர். மன்னர் அவையில் பாரதியின் புலமையைச் சோதித்துக் கொண்டு அவரை ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னார்கள். காந்திமதிநாதன் "பாரதி சின்னப் பயல் ," எனும் ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார். அதில் பாரதியை ஏளனம் செய்யும் நோக்கமும் இருந்திருக்கிறது. பாரதி உடனே பாடினார்.

"ஆண்டில் இளையவன் என்ற‌ந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் ‍ மாண்பற்ற‌
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி (பார் அதி) சின்னப் பயல்"

"காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப் பயல்" எனும் பொருள்படும்படி அமைந்தது இந்தப் பாடல். இதைக் கேட்டு சபையோர் பரிகசிக்க குறுகிப்போனார் காந்திமதி நாதன். உடனே வயதில் மூத்தவரை அப்படி ஏளனம் செய்தது தவறு என்றுணர்ந்து பாரதி, மறுபடி பாடலை மாற்றிப் பாடினார். எப்படி?

"ஆண்டில் இளையவன் என்றுஐய அருமையினால்
ஈண்டின்று என்றன்தன்னை நீயேந்தினையால் மாண்புற்ற‌
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு
பாரதி சின்னப் பயல்"

வயதில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். சபையிலிருந்தோர் பாரதியின் பண்பினைப் போற்றினர். இந்த நிகழ்வு நடைபெறும் போது பாரதிக்கு வயது 14. இதுவே அவரின் இளமையில் புலமைக்கு ஓர் சான்று.

Sunday, January 13, 2019

தமிழ் மொழியின் இன்றைய நிலை

'மெல்லத் தமிழ் இனி சாகும்' என்ற வார்த்தை மெய்யாகி விடுமோ என்ற பயம் எனக்குள்ளே மெல்ல மெல்ல எழுகிறது, ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவியரில் 50 சதவிகிதத்தினருக்கு, இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தைப்  புரிந்துகொள்ளக்கூடிய திறன் இல்லை. எட்டாம் வகுப்பு மாணவ- மாணவியரில் 30 சதவிகிதத்தினருக்கும் இதே பிரச்னைதான். ஆங்கிலத்தை மின்னல் வேகத்தில் வாசிக்கும் இந்த மாணவ- மாணவியர்களால், தமிழைத் திக்கித் திணறித்தான் வாசிக்க முடிகிறது. இந்த விஷயத்தில் அரசுப் பள்ளி, தனியார்ப் பள்ளி என்கிற வேறுபாடு இல்லை. மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியரில் தனியார்ப் பள்ளிகளைவிட அரசுப் பள்ளி மாணவர்கள் சற்று பரவாயில்லை. அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி முறை  இருப்பதால், தனியார்ப் பள்ளி மாணவர்களைவிட அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் வாசிப்புத் திறன் சற்று அதிகம்.

தமிழ் மொழியை வாசிக்கவே மாணவ - மாணவியர் தடுமாறும் விஷயம் மிகவும் ஆபத்தானது. மொழியை வாசிக்கத் தெரிந்தால் மட்டுமே அதிலுள்ள கருத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். இப்போது தமிழில் படிக்கத் தடுமாறுபவர்கள், பிற்காலத்தில் கஷ்டப்பட நேரிடும். அதனால், இந்த விஷயத்தில் பள்ளிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலத்தை வாசிக்கும்போது உற்சாகப்படுத்துவது போன்று, தமிழை வாசிக்கும்போதும் குழந்தைகளை  உற்சாகப்படுத்த வேண்டும்.

இந்நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும் ?

குழந்தைகள் படிக்க விருப்பமுள்ள கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். சித்திரக்கதைப் (காமிக்ஸ்) புத்தகங்கள்கூட மாணவர்களின்  வாசிப்புத்திறனை மேம்படுத்தும். பாடப்புத்தகத்தை எடுக்க மறுக்கும் மாணவர்கள்,  சித்திரக்கதைப் புத்தகங்களை வாசிக்கும் திறன்மூலம் தங்களை அறியாமலேயே தாய்மொழியைப் பயில பயிற்சி பெறுகின்றனர். தமிழ் மொழியில் வெளிவந்த சித்திரக்கதைப் புத்தகங்கள் அழிந்துபோயின. இதுகூட மொழி அழிவுக்கான ஓர் அடையாளம்தான். இப்போது ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களையே குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். தமிழ் மொழி சித்திரக்கதைப் புத்தகங்களே மொழியைப் படிக்கவும் காக்கவும் துணை நிற்பவை; குழந்தைகள் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் சக்தி படைத்தவை.

தாய் மொழியில் வாசிக்கும் திறனைக் குழந்தைகளிடம் இளம் பருவத்திலேயே விதைத்துவிட வேண்டும். இதை நமது வீட்டிலிருந்தே தொடங்கினால்தான் நம் மொழியைக் காக்க முடியும். இப்போது தமிழ் படிக்கத் தடுமாறும் குழந்தைகள் 10 வருடங்களுக்கு முன் ஆங்கில மோகம் பிடித்த பெற்றோர்களால் உற்சாகப்படுத்தப்பட்டவர்கள். தமிழ் மொழியை அலட்சியப்படுத்தியதற்கு விலையாக, தாய்மொழியை வாசிக்கத் திணறும் மாணவச் சமுதாயம் உருவாகியிருக்கிறது. நம்மையறியாமலேயே தாய்மொழியின் அழிவுக்கும் நாம் துணை நிற்கிறோம். அதேவேளையில் இந்தியை எதிர்த்து வெளியே குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியே சென்றால், வருங்காலத்தில் தமிழ்மொழியே அழிந்துவிடும் நிலை உருவாகிவிடும். ஆகையால், தமிழ் மொழியை வாசிக்கத் தடுமாறும் குழந்தைகள் மீது இனி தனிக்கவனம் செலுத்தி, வாசிப்புத்திறனை மேம்படுத்தினால், நம் மொழி நம் கையில்.

வாழிய செந்தமிழ் ! வாழ்க  நற்றமிழர் !! வாழிய பாரத மணித்திரு நாடு !!!

- நன்றி விகடன் 

Thursday, September 6, 2018

யாருக்கு நல்ல அறிவுரை கூறவேண்டும்?


விவேகசிந்தாமணி பாடல்: 10

"வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாவிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே"

பொருள் விளக்கம் :
ஒரு குரங்கு மழையில் நனைந்துகொண்டிருந்தது, அதனைப் பார்த்த தூக்கணாங் குருவி கவலைப் பட்டு அதனிடம் சொன்னது , நீயும் என்னைப் போல கூடு கட்டி இருந்தால் இப்படி மழையில் நனைந்து கொண்டு இருக்க வேண்டியது இல்லையே என்று. அதனால் ஆத்திரம் கொண்ட குரங்கு அந்த தூக்கணாங் குருவி கூட்டையே பிய்த்து எறிந்துவிட்டது. அதுபோல
நாம் படித்த அரிய நூல்களில் உள்ள பல நல்ல கருத்துகளை ஈன புத்தியுடைய கெட்டவர்களுக்கு சொல்லப் போனால் சொல்பவர்களுக்கே அது ஆபத்தாக முடியும்.

இதைத் தான் தெய்வப் புலவர் வள்ளுவர் இரண்டே அடியில் கூறியிருப்பார்

"புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்."

குறள் விளக்கம் :
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.

Tuesday, May 8, 2018

திருவாசகம் எனும் தேன்


வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்று அருட்ஜோதி இராமலிங்க வள்ளலாரால் உருகி உருகிப் பாராட்டப்பெறும் மாணிக்கவாசகர்.
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது மகாவாக்கியம். கல் நெஞ்சம் கொண்டாரையும் உருகச் செய்யும், நெகிழ்ந்து கரைய வைக்கும் பாக்கள் அவை.

திருக்கோத்தும்பி

கோத்தும்பி என்பது அரச வண்டு என்று பொருள்படும். அரச வண்டை அழைத்து, ‘இறைவன் திருவடிக்கமலத்தில் சென்று ஊதுவாய்’ என்று கூறுவது போலப் பாடப்பட்டுள்ளது

"பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ "
பொருள் விளக்கம்: கோத்தும்பீ - அரச வண்டே! பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரமனும், புரந்தரனும் - இந்திரனும், பொற்பு அமைந்த - அழகு அமைந்த, நா ஏறு செல்வியும் - பிரமனது நாவில் தங்கிய கலைமகளும், நாரணனும் - திருமாலும், நான்மறையும் - நான்கு வேதங்களும், மாவேறு சோதியும் - பெருமை மிகுந்த ஒளி வடிவினனாகிய உருத்திரனும், வானவரும் - மற்றுமுள்ள தேவர்களும், தாம் அறியா - தாம் அறியாவொண்ணாத, சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய திருவடிக் கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

"நானார்என் உள்ளமார் ஞானங்க ளார்என்னை யாரறிவார்
வானோர் பிரான்என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ"
பொருள் விளக்கம்: கோத்தும்பீ - அரச வண்டே! வானோர் பிரான் - தேவர் பெருமான், மதி மயங்கி - பேரருள் காரணமாக மனமிரங்கி, என்னை ஆண்டிலனேல் - என்னை ஆண்டருளாவிடின், நான் ஆர் - நான் என்ன தன்மையுடையவனாயிருப்பேன், என் உள்ளம் ஆர் - என் உள்ளம் என்ன தன்மையுடையதாயிருக்கும். ஞானங்கள் ஆர் - என் அறிவு எத்தன்மைய தாயிருக்கும், என்னை யார் அறிவார் - என்னைப்பற்றி யார் தெரிந்து கொள்ளப் போகிறார்கள், ஆதலின், ஊன் ஆர் உடைதலையில் மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்பலி தேர் - உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற, அம்பலவன் - அம்பலவாணனது, தேன் ஆர் கமலமே - தேன் நிறைந்த தாமரை போன்ற திருவடியின்கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

இளையராஜாவின் இசையில் இந்த பாடலை சிம்பொனி வடிவில் கேட்டால், அதை விட வேறு ஆனந்தம் இல்லை

https://www.youtube.com/watch?v=fr8mTh6jEwU

Monday, May 7, 2018

ஒளவையாருக்கும் கம்பருக்கும் நடந்த இலக்கியச் சண்டை

“” ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.
அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.
ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.
கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே கரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:
"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"
தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.
"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் கரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.
அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:
பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு
என்பதாகும் அவ்வரிகள்.
இதையும் சேர்த்து முழுப்பாடலாக,
"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு "
என்பதாகும்.
ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.
தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,
"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"
என்று மரியாதை இல்லாமல் இரட்டுறமொழிதல் விடுகதை கூறினார். இதற்கு பதிலாக ஔவையார்,
"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."
தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.
எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.
"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.
எவ்வளவு அருமையான புலமை விளையாட்டு பார்த்தீர்களா !! “”

Thursday, May 3, 2018

காளமேகப் புலவரின் சிலேடைப் பாடல்கள்


தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை கவி காளமேகத்தைப் பாடச்சொல்ல, காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.
"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா"
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).
அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.
"தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?"
தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?) என்னே அழகிய விதத்தில் பாடியுள்ளார்?!

வருமானமும் செலவும் குறித்து தெய்வப் புலவர் வள்ளுவரும், தமிழ் மூதாட்டி அவ்வையும் கூறியது


"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்"
தன் வருமானமறிந்து, சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, நிறைய இருப்பது போல் காட்சி தந்து ஒன்றுமே இல்லாமல் அழிந்துவிடும்.
"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை"
வரும் வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரச் செலவு அதிகமாக இல்லையென்றால் அவர் வாழ்வில் கெடுதி இல்லை.
"ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு"
"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...
விளக்கம்:
ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள்... அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்... எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர்.